அடுத்த சில நாள்கள் முக்கியமானவை: உக்ரேன் அதிபர் எச்சரிக்கை
கியவ் வட்டாரத்தில் 1,200க்கும் அதிகமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. அவ்வட்டாரம் கடந்த மாதம் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவை அங்கு பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
உக்ரேன்மீது ரஷ்யா படை எடுத்து கிட்டத்தட்ட ஆறு வாரங்களாகிவிட்ட நிலையில், கடந்த வாரம் முழுவதும் உக்ரேன்மீது ரஷ்யா குண்டுமழை பொழிந்தது. இதில், வடகிழக்கிலுள்ள கார்கிவ் நகரில் இவ்வார இறுதியில் மட்டும் ஒரு குழந்தை உட்பட 12 பேர் மாண்டுபோயினர்.
சண்டையில் முன்களத்தில் வெற்றி கிட்டாததால் ரஷ்யப் படையினர் தங்களது ஆத்திரத்தை அப்பாவிகள்மீது காட்டி வருவதாக கார்கிவ் வட்டார ஆளுநர் ஒலெக் சினகோபோவ் தெரிவித்தார்.
உக்ரேனின் ஆகப் பெரிய தொழில் நகரமான டினிப்ரோவின் உள்ளூர் விமான நிலையம், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் கிட்டத்தட்ட அழிந்துபோனது.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை கிரமட்டோர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தின்மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது.
ரஷ்யப் படையெடுப்பால் உக்ரேனில் இதுவரை 1,793 பேர் மாண்டுவிட்டதாகவும் 2,439 பேர் காயமுற்றதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் கியவ்வைச் சுற்றிய பகுதிகளில் மட்டும் இதுவரை 1,222 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய வழக்கறிஞர் வெனடிக்டோவா குறிப்பிட்டார்.
தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாகும் உக்ரேன்
ஆற்றல்மிக்க குண்டுவெடிப்புகள் நாட்டின் தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நகரங்களை உலுக்கிய நிலையில், ரஷ்யாவின் புதிய தாக்குதலை எதிர்கொள்ள உக்ரேனியப் படைகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், அனைத்துலக ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை முழுமூச்சுடன் மேற்கொண்டுவரும் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, வரும் வாரம் முக்கியமானதாகவும் பதற்றமானதாகவும் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.
"ரஷ்யா இன்னும் அச்சப்படும். சண்டையில் தோற்றுவிடுவோம் என அஞ்சும். உண்மையை ஒப்புக்கொள்ள நேரிடலாம் என பயங்கொள்ளும்," என்று நேற்று முன்தினம் இரவு காணொளி வழியாக ஆற்றிய உரையின்போது திரு ஸெலன்ஸ்கி சூளுரைத்தார்.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடு ஒன்றால் உக்ரேனுக்கு வழங்கப்பட்ட எஸ்-300 எறிகணைத் தடுப்புக் கருவிகளை அழித்துவிட்டோம் என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரியப் பிரதமர்
ரஷ்யா பயணம்
இந்தச் சூழலில், பேச்சுவார்த்தை மூலமாகப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ செல்லவிருப்பதாக ஆஸ்திரிய நாட்டின் பிரதமர் கார்ல் நெகமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை நேற்று சந்திக்க இருந்தார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியபின், ரஷ்யா சென்ற முதல் ஐரோப்பியத் தலைவர் நெகமர்தான்.
"ராணுவ அடிப்படையில் நாங்கள் நடுநிலைமையோடு இருக்கிறோம். ஆனாலும், உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை தொடர்பில் நாங்கள் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம். இந்தச் சண்டை நிறுத்தப்பட வேண்டும்," என்று டுவிட்டர் பக்கம் வாயிலாக திரு நெகமர் வலியுறுத்தியிருக்கிறார்.

