6,000 வீவக வீடுகள் கட்டப்படும்

2 mins read

கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட் பகுதியில் அமையும்; மூவாண்டுகளுக்குள் முதல் 'பிடிஓ' விற்பனை

கிரேட்­டர் சௌதர்ன் வாட்­டர்­ஃபிரன்ட் பகு­தி­யி­லுள்ள கெப்­பல் கிளப் அமைந்துள்ள இடத்தில் கிட்­டத்­தட்ட 6,000 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள் கட்­டப்­படும். மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் அங்கு முத­லா­வது 'பிடிஓ' திட்ட வீடு­கள் விற்­ப­னைக்கு வரும்.

அந்த 48 ஹெக்­டர் இடத்­தில் கட்­டப்­ப­ட­வி­ருக்­கும் 9,000 வீடு­களின் ஒரு பகு­தி­யாக இவை அமை­யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று தெரி­வித்­தார். அவ்­வீ­டு­கள் இயற்­கைக்கு நெருக்­க­மான, தனித்­து­வ­மான நீர்­மு­கப்பு வாழ்க்­கையை வழங்­கும்.

எஞ்­சிய 3,000 வீடு­கள் தனி­யார் வீடு­க­ளாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொது, தனி­யார் வீட­மைப்­புத் திட்­டங்­கள் அடுத்த மூன்று முதல் ஐந்­தாண்­டு­களில் படிப்­ப­டி­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

பிடா­டாரி பேட்­டை­யில் கிட்­டத்­தட்ட பாதி அள­வுள்ள அந்த 48 ஹெக்­டர் இட­மா­னது, முதிர்ச்­சி­ அ­டைந்த பேட்­டை­யான புக்­கிட் மேரா­வின்­கீழ் வரு­கிறது. தெலுக் பிளாங்கா சாலை, பெர்­லே­யர் கிரீக், புக்­கிட் செர்­மின் ஆகி­ய­வற்­றால் அது சூழப்­பட்­டுள்­ளது.

"மையப் பகு­தி­யில், இரு எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்கு அருகே அமைந்­துள்­ள­தால் அந்­தக் குடி­யி­ருப்­புப் பேட்­டையை கார் பயன்­பாடு குறை­வா­ன­தா­க­வும் குடி­யிருப்­பா­ளர்­கள் நடந்து அல்­லது மிதி­வண்டி மூலம் எளி­தா­கச் செல்லும் வகை­யி­லும் வைத்­தி­ருக்க விரும்பு­வோம்," என்­றார் அமைச்­சர் லீ.

வட்­டப் பாதை­யில் வரும் லேப்­ரடார் பார்க், தெலுக் பிளாங்கா ஆகிய இரு எம்­ஆர்டி நிலை­யங்­களும் அவ்­வீ­டு­க­ளின் எதிர்­கா­லக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும். அவ்­விரு நிலை­யங்­களும் நடை­பா­தை­கள் மூல­மாக அந்­தக் குடி­யி­ருப்­புப் பேட்­டை­யு­டன் இணைக்­கப்­படும்.

அந்த 48 ஹெக்­டர் இடத்­தில் கிட்­டத்­தட்ட 20% பூங்­காக்­க­ளா­க­வும் காலி இடங்­க­ளா­க­வும் இருக்­கும். அப்­பேட்­டை­யில் அமை­யும் நான்கு பசுமை வழித்­த­டங்­க­ளை­யும் அது உள்­ள­டக்­கும்.

சூழ­லி­யல் தாக்க ஆய்­வுப் பரிந்­து­ரை­கள் மற்­றும் இயற்கை ஆர்­வலர் குழுக்­க­ளின் கருத்­து­கள் இந்­தத் திட்­டங்­களை வழி­ந­டத்­து­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டார். சூழ­லி­யல் தாக்க ஆய்வு தொடர்­பில் பொது­மக்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகு அவை மெரு­கூட்­டப்­ப­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

"அவ்விடம் நகர் மையத்தை ஒட்டி அமைந்­துள்­ள­தால், வேலை­களுக்கு அருகே வீடு­க­ளைக் கொண்டு வரு­கி­றோம். இது, நக­ரின் மையப் பகு­தி­யில் அதி­க­மான வீட­மைப்­புத் தெரி­வு­க­ளை­யும் கலப்புப் பயன்­பாட்­டுத் திட்­டங்­களை­யும் வழங்­கும் எங்­க­ளது முயற்­சி­யின் ஓர் அங்­கம்," என்று அமைச்­சர் லீ குறிப்­பிட்­டார்.

கெப்­பல் கிளப்­பில் உள்ள பிரௌன்­ஃபீல்ட் தளத்­தில் இந்த அனைத்து மேம்­பாட்­டுப் பணி­களும் இடம்­பெ­றும். கோல்ஃப் திட­லுக்­கான குத்­த­கைக்­கா­லம் முடிந்­த­தும் அந்­நி­லப்­ப­குதி வீட­மைப்­புக்கு ஏற்­ற­படி மாற்­றப்­படும் என்று திரு லீ சொன்­னார்.

கோல்ஃப் திட­லின் குத்­தகை வரும் ஜூன் 30ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­வ­தாக சிங்­கப்­பூர் நில ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

முன்­னாள் பாசிர் பாஞ்­சாங் மின்­நி­லை­யக் கட்­ட­டங்­க­ளை­யும் தனித்­து­வ­மிக்க, பல­ப­யன் வட்­டா­ர­மாக உரு­மாற்­றும் திட்­டங்­கள் இருப்­ப­தாக அமைச்­சர் லீ கூறி­ இ­ருக்­கி­றார்.

இப்­பு­திய வீடமைப்புத் திட்­டத்­திற்­குப் பெரும் வர­வேற்பு இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.