ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் படைகள் உக்ரேனில் இனப் படுகொலை செய்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல்முறையாகக் கூறியுள்ளார். உக்ரேனின் உத்திபூர்வ நகரான மரியபோலை தன்வசப்படுத்த ரஷ்யா தீவிர முயற்சிகளை எடுத்துவரும் வேளையில் திரு பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா பல கொடுமைகளை இழைத்ததாக மேற்கத்திய நாடுகள் ஏற்கெனவே குறைகூறி வருகின்றன.
மேலும், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா மோசமான தாக்குதல்களை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அஞ்சப்படுகிறது.
அந்தத் தாக்குதல்களில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் வாஷிங்டன் எச்சரித்துள்ளது.
"ஆம், இதை நான் இனப் படுகொலை என்றே வகைப்படுத்துகிறேன்," என்று திரு பைடன் செய்தியாளர்களிடம் கூறினார். இதற்கு சில மணிநேரத்திற்கு முன்னரே ஐயோவா நகரில் ஆற்றிய உரையிலும் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
"இதை இனப் படுகொலையாக வகைப்படுத்தமுடியுமா என்பதை அனைத்துலக வழக்கறிஞர்கள் முடிவுசெய்வர். ஆனால் நான் இதை இப்படித்தான் பார்க்கிறேன்," என்றார் திரு பைடன்.
"உக்ரேனிய குடிமகனாகக்கூட ஒருவரும் இருக்கமுடியாது என்பதை புட்டின் நிலைநாட்ட முயல்கிறார் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
மாஸ்கோ இனப் படுகொலையில் ஈடுபடுகிறது என்று பலமுறை கூறிவந்த உக்ரேனிய அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி, திரு பைடனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் "உண்மையான ஒரு தலைவரின் உண்மையான வார்த்தைகள்," என்று டுவிட்டரில் குறிப்பிட்டார்.
"செயல்களைத் தகுந்த பெயர்களைக் கொண்டு விளக்குவது தீமையை எதிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்," என்று திரு ஸெலென்ஸ்கி தமது பதிவில் கூறியிருந்தார்.
உக்ரேனின் தலைநகர் கியவிற்கு அருகே இருக்கும் புக்கா நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அது உலக அளவில் கண்டனத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து திரு புட்டின் ஒரு போர் குற்றவாளி என்று திரு பைடன் சொல்லியிருந்தார்.
எனினும், இனப் படுகொலை என்ற வார்த்தைகளை அவர் இதுவரை பயன்படுத்தியதில்லை.