இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பிறகு இலங்கை அதன் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையால் எரிசக்தி, மருந்து போன்றவற்றுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணிநேரம் மின்தடையும் ஏற்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக பல்லாயிரம் பேர் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் கொழும்பின் காலி முகத் திடலில் முகாமிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர். ராஜபக்சே குடும்பம் பதவி விலகினால்தான் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயார் என்று அவரது அலுவலகம் நேற்று அறிக்கை விடுத்தது.

