மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை குழுவை வழிநடத்த நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் யார் என்னும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
அமைச்சரவையின் அமைச்சர்கள் தங்களை வழிநடத்த 49 வயது திரு வோங்கைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஏப்ரல் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரான திரு கோ பூன் வான் வழிகாட்டலில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் திரு வோங்கை 4ஜி குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இந்த முடிவு பின்னர் மக்கள் செயல் கட்சி நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபோது அனைத்து அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்தனர் என்று அறிக்கை குறிப்பிட்டது.