கொவிட்-19 கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டதால், சித்திரைப் புத்தாண்டு நாளான நேற்று பக்தர்கள் ஆலயங்களில் திரளாகக் கூடி, இறைவனை வழிபட்டனர்.
இவ்வாண்டு கவலைகள் பறந்தோடி இன்பங்கள் விரைந்தோடி வரும் என நம்பிக்கை கொண்டு உள்ளபோதும், தங்களது தனிப்பட்ட செலவுகள் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சிராங்கூன் சாலை, ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் நேற்று தாம் எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம் இருந்ததாகக் கூறினார் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான விருந்தோம்பல்துறைப் பணியாளர் தமிழ்ச்செல்வி காளிமுத்து, 59.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி), மின்கட்டணம், உணவுப்பொருள் விலையேற்றம் போன்றவற்றால் வருங்காலத்தில் செலவு கூடும் என்றாலும் சமாளித்துவிடலாம் என நம்புவதாக அவர் சொன்னார்.
செலவுகள் தொடர்ந்து கூடுவது இயல்புதான் என்றாலும் கூடுதல் செலவு ஏற்படாதிருக்க உடல்நலத்திற்கு வேண்டுவதாகக் கூறினார் வரவேற்பாளராகப் பணிபுரியும் திருவாட்டி கௌசல்யா ஜெய்சங்கர், 33. மாறாக, விலைவாசி உயர்வைச் சமாளிக்க சம்பள உயர்வு கிட்டவேண்டும் என்பதே காசாளரான 22 வயது குமாரி மாலினி ராமமூர்த்தியின் எதிர்பார்ப்பு.
ஈராண்டுகளுக்குப்பின் நேற்று மீண்டும் மலேசியா திரும்பவிருந்த தாதி யுவராணி, 35, சிங்கப்பூர்-மலேசியா இடையே நில எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகக் கூறினார்.
ஸ்ரீலங்கராமையா பௌத்த ஆலயத்தில் சிங்களர்கள் புத்தாண்டு கொண்டாடினர். இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் ஒரு மக்களாக புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம் என்றும் இந்நன்னாளில் பௌத்த ஆலயங்கள் பொங்கலைப் போன்றதோர் இனிப்பு உணவைப் பக்தர்களுக்கு வழங்கும் என்றும் ஆலயத்தின் தலைமை பிக்கு கே. ரத்தினானந்த தேரோ தெரிவித்தார். சிங்களர்கள் மட்டுமின்றி தமிழர்களும் நேற்று அங்கு ஆலய வழிபாடு செய்தனர்.
சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்துள்ள தமிழரும் உடற்கூட பயிற்றுவிப்பாளருமான யுவராஜ் துரியாதாசு, 36, தங்களின் மூன்று மாதப் பெண் குழந்தை ரக்ஷயாவுடன் இந்து ஆலயத்திற்குச் சென்றுவிட்டு இங்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரம் சவால்மிக்கதாக இருந்தாலும் நம்பிக்கையுடன் தமது புதிய குடும்பத்தைத் தொடங்கியுள்ளதாக திரு யுவராஜ் கூறினார்.

