அடுத்த சில மாதங்களில் கூடுதல் சொகுசுக் கப்பல் நிறுவனங்களை சிங்கப்பூரில் இயங்க வைக்க சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இலக்கு கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்மூலம் சிங்கப்பூரில் இருப்பவர்களுக்குக் கூடுதல் சொகுசுக் கப்பல் பயணத் தெரிவுகள் கிடைக்கும்.
'டிரீம் குருசஸ்' சொகுசுக்
கப்பல் நிறுவனம் கடந்த மாதம் சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை நிறுத்திய பிறகு, ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனம் மட்டுமே இங்கு சொகுசுக் கப்பல் பயணங்களை வழங்கி வருகிறது.
குறிப்பிட்ட ஒரு நாட்டிற்குச் செல்லாமல் நடுக்கடல் வரை சென்று பிறகு சிங்கப்பூர் திரும்பும்
சொகுசுக் கப்பல் பயணத்தை ராயல் கரீபியன் நிறுவனம் தற்போது
வழங்குகிறது.
"சிங்கப்பூரில் இயங்க பல சொகுசுக் கப்பல் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. ஆனால் அவை சிங்கப்பூரிலிருந்தவாறு சொகுசுக் கப்பல் பயணங்களை வழங்க சில மாதங்கள் எடுக்கும்," என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் சொகுசுக் கப்பல் பயணப் பிரிவு இயக்குநர் ஆனி சாங் கூறினார். தடுப்பூசி தொடர்பான சோதனைகள் போன்ற ஏற்பாடு
களுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படும் என்றார் திருவாட்டி சாங்.
"அடுத்த சில மாதங்களில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு சொகுசுக் கப்பல்கள் சிங்கப்பூர் வந்தடையும். சிங்கப்பூரில் தற்போது மிகக் குறைவான சொகுசுக் கப்பல்கள் உள்ளன. நிலைமையைச் சரிசெய்வது எங்களுடைய கடமை," என்றார் அவர். 'டிரீம் குருசஸ்' நிறுவனத்தின் பிரதான நிறுவனமான ஜென்டிங் ஹாங்காங்கிற்கு நிதி பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 2ஆம் தேதியன்று சிங்கப்பூரில் வொர்ல்ட் டிரீம் கப்பல் மூலம் சொகுசுக் கப்பல் பயணம் வழங்குவதை அது
நிறுத்தியது.
அந்நிறுவனம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து சிங்கப்பூரில் சொகுசுக் கப்பல் பயணங்களை வழங்கியது. கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு சிங்கப்பூரில் சொகுசுக் கப்பல் பயணங்களை வழங்கிக்கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்திடம் இத்தாலியைச் சேர்ந்த 'கோஸ்டா குருசஸ்', ஜெர்மனியைச் சேர்ந்த 'டியுஐ குருசஸ்', ராயல்
கரீபியனின் 'சில்வர்சீ குருசஸ்' ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சிங்கப்பூருக்கு 'கோஸ்டா செரீனா' சொகுசுக்
கப்பலைக் கொண்டு வருவது தொடர்பாகக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தென்
கிழக்காசிய விற்பனைப் பிரிவுத் துணைத் தலைவர் திரு பால் சோங் தெரிவித்தார். 'கோஸ்டா செரீனா' சொகுசுக் கப்பல் இவ்வாண்டு
நவம்பர் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை
சிங்கப்பூரில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.