கடல்நீரை குடிநீராக்கும் சிங்கப்பூரின் ஐந்தாவது ஆலை ஜூரோங் தீவில் நேற்று திறக்கப்பட்டது.
அதிநவீன தண்ணீர் ெதாழில்நுட்பங்களுடன் கூடிய அந்த ஆலை, நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் காலன் அதாவது, 137,000 கன மீட்டர் குடிநீரை உருவாக்கித் தரும்.
இந்த அளவு நீரைக்கொண்டு 55 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பிவிடலாம். சிங்கப்பூருக்கு அன்றாடம் 430 மில்லியன் காலன் குடிநீர் தேவைப்படுகிறது. இதில் 7 விழுக்காட்டுக்குப் புதிய ஆலை பொறுப்பு வகிக்கும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆலையை இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே நிர்வகித்துவிடலாம். அந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை இல்லாத அதிநவீன ஆலையாகப் புதிய ஆலை திகழ்கிறது.
சிங்கப்பூர் தனக்குத் தேவையான குடிநீரை நான்கு வழிகளில் பெறுகிறது. இறக்குமதி, நீர்த்தேக்கம், நியூவாட்டர் ஆகியவை இதர மூன்று வழிகள் ஆகும்.
தண்ணீர் தேவை 2060ஆம் ஆண்டு வாக்கில் இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேவையில் 85 விழுக்காட்டை நியூவாட்டர், கடல்நீரை குடிநீராக்குவது ஆகிய வழிகள் மூலம் பெறுவது தனது திட்டம் என்று கழகம் ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் வார தொடக்கத்தையொட்டி துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று புதிய ஆலையை அதிகாரபூர்வ முறையில் திறந்துவைத்தார். புதிய ஆலை சுமார் ஐந்து காற்பந்து திடல் அளவுக்கு 3.7 ஹெக்டருக்கும் அதிக பரப்பளவு உள்ள இடத்தில் அமைந்து இருக்கிறது.
நவீன புதிய ஆலை, இதர ஆலைகளைவிட சுமார் 5 விழுக்காடு அதிக எரிசக்தி சிக்கனத்தையும் சாதிக்கக்கூடியது. இது துவாஸ் பவர் நிறுவனத்தின் தெம்புசு பல பயனீட்டு வளாகத்துடன் ஒருங்கிணைந்து அமைந்து இருப்பதே இதற்கான காரணம்.
புதிய ஆலை, கடல்நீரை பெறுவது, கழிவுநீரை வெளியேற்றுவது, மின்சாரப் பயனீடு ஆகியவற்றில் அந்த வளாகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதால் ஏற்படக்கூடிய வருடாந்திர எரிசக்தி மிச்சம் கணிசமானது.
அது கிட்டத்தட்ட 1,000 வீவக குடும்பங்களுக்குத் தேவைப்படும் எரிசக்தி அளவுக்குச் சமம் என்று கழகம் கூறியது.
புதிய ஆலையை துவாஸ் பவர் நிறுவனமும் எஸ்டி இன்ஜினியரிங் நிறுவனமும் சேர்ந்த ஒரு கூட்டு நிறுவனம் 25 ஆண்டு காலத்திற்கு நிர்வகித்து நடத்தும்.
இதனிடையே, புதிய ஆலையைத் திறந்துவைத்து பேசிய துணைப் பிரதமர் ஹெங், ஜூரோங் தீவு ஆலை, நம்முடைய தண்ணீர் பயணத்தில் முக்கியமான மற்றொரு மைல்கல் என்று குறிப்பிட்டார்.
கடந்த இரண்டாண்டுகளில் இதையும் சேர்த்து கடல்நீரை குடிநீராக்கும் இரண்டு ஆலைகள் செயல்படத் தொடங்கி உள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நியூவாட்டர், கடல்நீரை குடிநீராக்கும் நடைமுறை ஆகியவை அதிக செலவு பிடிக்கும் என்பதைச் சுட்டிய திரு ஹெங், கடல்நீரை குடிநீராக்குவதற்கு ஆகும் செலவைக் குறைக்கும் வகையில் ஆய்வு உருவாக்கத்தில் சிங்கப்பூர் முதலீடு செய்து வருவதாகத் தெரிவித்தார்.

