பிரான்சின் பிரபலமான மருந்து தயாரிப்பு நிறுவனம் சனோஃபி, சிங்கப்பூரில் அதிநவீன தடுப்பூசி மருந்து ஆலையை அமைக்கிறது. அந்த நிறுவனம் ஐந்தாண்டுகளில் இரண்டு இடங்களில் இரு ஆலைகளை அமைக்க $1.3 பில்லியன் முதலீடு செய்கிறது.
அவற்றில் ஓர் ஆலை பிரான்சிலும் $638 மில்லியன் முதலீட்டில் மற்றோர் ஆலை சிங்கப்பூர் துவாசிலும் அமையும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் கிருமித்தொற்று ஏற்படும்போது அதை ஒடுக்க தேவைப்படக்கூடிய புதிய தடுப்பூசி மருந்தை உடனுக்குடன் பரிசோதித்துப் பார்க்க இந்தப் புதிய ஆலை வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிமருந்துகள், சளிக்காய்ச்சல், இளம்பிள்ளைவாதம், மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான தடுப்பூசி மருந்து, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஆகியவற்றை சனோஃபி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் உலகளவில் மிக முக்கிய நிறுவனமாகும். சிங்கப்பூரில் தடுப்பூசி மருந்து தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அண்மையில் இந்த நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஜெர்மனியின் 'பயோஎன்டெக்' நிறுவனமும் 'ஹில்லமன் லெபரட்டரிஸ்' என்ற நிறுவனமும் இங்கு உற்பத்தி ஆலைகளை அமைக்கின்றன. 'தெர்மோ ஃபிஷர் சையின்டிஃபிக்' நிறுவனமும் ஆலை ஒன்றை அமைக்கிறது.
எதிர்காலத்தில் கிருமித்தொற்று ஏற்படும்போது அதை உடடினயாக செயல்பட்டு ஒடுக்க இவற்றின் மூலம் சிங்கப்பூருக்கும் இந்த வட்டாரத்திற்கும் புதிய பலம் ஏற்படும்.
சிங்கப்பூரில் அமையும் தனது தடுப்பூசி ஆலை அதிநவீனமாக இருக்கும் என்று சனோஃபி தெரிவித்து இருக்கிறது.
அந்த வகை ஆலை உலகில் இதுவரை வேறு எங்கும் இல்லை என்று அது கூறியது. முற்றிலும் மின்னிலக்கமயமாக இருக்கும் புதிய ஆலை, ஒரே நேரத்தில் நான்கு விதமான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் ஆற்றலைக் கொண்டது என்றும் அந்த நிறுவனம் விளக்கி இருக்கிறது.
புதிய ஆலை 2025 முடிவில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துவாஸ் உயிரியல் மருத்துவ தொழில் பேட்டையில் அமையும் அந்த ஆலை, உள்ளூரில் 200 பேருக்கு வேலை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆலைக்கான நிலம் அகழும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அதில் கலந்துகொண்டார்.
கிருமித்தொற்று ஏற்பட்டால் அதைச் சமாளிக்க எப்போதுமே நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என்பதை கொவிட்-19 கிருமி மறுஉறுதிப்படுத்தி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமி மங்கி வருகிறது என்றாலும் கூட அதற்கு எதிரான வேகத்தை நாம் குறைத்துவிடக் கூடாது என்றும் திரு ஹெங் அந்த நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.
ஆகையால், சிங்கப்பூரில் தடுப்பூசி மருந்து தயாரிப்பு வேகம் எடுத்து வருவதால் எதிர்காலத்தில் தொற்று ஏற்படும்போது அதைத் திறம்பட சமாளிக்க இந்த வட்டாரத்தில் அதிக ஆற்றல் இருக்குமென அவர் தெரிவித்தார்.

