இலங்கையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது கொல்லப்பட்ட வருக்கு ஈமச்சடங்கு நடக்கவிருந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராணுவத்தை மூன்று நாள் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.
இலங்கையில் உணவு, எரிபொருளுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. பணவீக்கம் விண்ணை முட்டிவிட்டது.
வரலாறு காணாத பொருளியல் பிரச்சினையை அந்த நாடு எதிர்நோக்குகிறது. அதிபர் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
ஆனாலும் பதவி விலக அதிபர் மறுத்து வருகிறார்.
நாட்டின் மத்தியில் இருக்கும் ரம்புக்கனா என்ற ஊரில் சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் மாண்டுவிட்டார்.
அவருக்கான ஈமச்சடங்கு நேற்று நடக்கவிருந்தது.
இந்த நிலையில், ரம்புக்கனாவிலும் அதன் பக்கத்து வட்டாரங்களிலும் ராணுவத்தினர் சனிக்கிழமை வரை பணியில் இருப்பார்கள் என்று இலங்கை தகவல் துறை அறிக்கையில் தெரிவித்தது.
அதேவேளையில், வன்செயல் மரணம் தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகளை அந்த நாட்டின் காவல்துறை வேறு இடங்களுக்கு இடம் மாற்றி உத்தரவிட்டது.
நாட்டில் அதிபர் ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அந்த நாட்டின் எதிர்த்தரப்பு அரசமைப்புச் சட்ட திருத்தங்களை முன்மொழிந்து உள்ளது.
இலங்கை பிரச்சினைக்குத் தீர்வுகாண அந்த நாட்டு அரசாங்கம் இந்த ஆண்டு உடனடியாக US$4 பில்லியன் உதவி வேண்டும் என்று கோரி பல தரப்புகளையும் அணுகி வருகிறது.

