இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலக வேண்டும் என்ற எதிர்ப்புக்குரல் வலுத்து வருகிறது.
இதுவரை ஆதரவாளராக இருந்த அமைச்சரே தமக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் பிரதமர் மகிந்தவிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஊடக அமைச்சர் நாலக கொடஹெவாவும் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் அலுவலகத்திற்கு வெளியே போராடிவரும் ஆயிரக்கணக்கானோருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மாதக்கணக்கில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. விலைவாசியும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துவிட்டதால் நாட்டில் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சேயின் தீவிர விசுவாசியாகக் கூறப்பட்ட திரு கொடஹெவா, பிரதமரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இடைக்காலமாக அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
போராட்டக்காரர் ஒருவரைக் காவல்துறை சுட்டுக்கொன்றுவிட்டதை அடுத்து, அரசாங்கம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக அவர் சொன்னார். அத்துடன், அமைச்சர் பதவியைத் துறப்பதாகத் தாம் பதவி விலகல் கடிதம் கொடுத்தும் அதிபர் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்தியா நன்கொடையாக வழங்கியிருக்கும் குறைந்தது 101 வகை மருந்துப்பொருள்களும் மருத்துவக் கருவிகளும் வரும் புதன்கிழமை இலங்கைக்கு வந்துசேரும் என்று சுகாதார அமைச்சர் சன்னா ஜெயசுமன தெரிவித்துள்ளார். அதுபோல், இந்தோனீசியாவும் இலங்கைக்கு மருத்துவ உதவி வழங்கவுள்ளது.

