விடுமுறையைக் கழிக்க சுற்றுலா வருவோர் அதிகரிப்பு
அண்மைய வாரங்களாக சுற்றுப்பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதால், இவ்வாண்டில் பயணத்துறை வலுவாக மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு வருமுன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்பயணிகள் வருகை மேலும் உயரும் என்பது சுற்றுப்பயணத் துறையினரின் எதிர்பார்ப்பு.
கடந்த மாதம் 150 சுற்றுப்பயணிகளைக் கையாண்ட நிலையில், இம்மாதம் அந்த எண்ணிக்கை 700ஆக உயர்ந்துவிட்டது என்றார் 'நாம் ஹோ டிஎம்சி' சுற்றுப்பயண நிறுவன இயக்குநர் மகேஷ் பவனாஸ்கர்.
"மே மாதத்தில் வலுவான வளர்ச்சியை, ஏப்ரலைப்போல குறைந்தது இருமடங்காக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் திரு மகேஷ்.
விமானம் அல்லது கடல்வழியாகச் சிங்கப்பூருக்குக் குழுவாக வரும் குடும்பங்களைப் பொறுத்தமட்டில், பிசிஆர் அல்லது ஏஆர்டி பரிசோதனை தொந்தரவாகவும் செலவுமிக்கதாகவும் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தடுப்பூசி போட்டவர்கள் பயணத்திற்குமுன் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என அறிவித்து இருப்பது சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பு என்று சொன்னார் 'குளோபல் டிக்ஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி சான் சீ கோங்.
"குழு வரம்பு போன்ற மற்ற கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதும் சுற்றுப்பயணிகளின் பயணத்தை எளிதாக்கும். தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற அண்டை நாடுகளும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. இவையெல்லாம் இந்த வட்டாரத்தை நோக்கிச் சுற்றுப்பயணிகளை ஈர்த்து, சிங்கப்பூர் சுற்றுப்பயணத் துறை வளர்ச்சிக்குப் பங்களிக்கும்," என்றார் அவர்.
இவ்வாண்டு ஜனவரியில் கிட்டத்தட்ட 57,000 சுற்றுப்பயணிகளும் பிப்ரவரியில் 68,000 சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூர் வந்தனர். மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 120,000ஆக உயர்ந்தது.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியா, இந்தோனீசியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமானோர் வந்தனர். இந்தியாவிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 55,000 பேர் வந்தனர்.
'எலிவேட்டட் கன்சல்டன்சி அண்ட் டிரெய்னிங்' நிறுவனத்தைத் தோற்றுவித்தவரும் சுற்றுப்பயண ஆலோசகருமான டாக்டர் பர்க்கத்துன்னிசா கூறுகையில், 2023ஆம் ஆண்டில் அல்லது அதன்பின்னர் பயணங்கள் கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்த நிலையை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
ஆயினும், அண்மைய கட்டுப்பாடுகள் தளர்வால், எதிர்பார்ப்பதைவிட விரைவாகப் பயணத்துறை மீட்சி காணும் என்பது டாக்டர் பர்க்கத்துன்னிசாவின் நம்பிக்கை.
அதே நேரத்தில், ஊழியர் பற்றாக்குறை போன்ற சில இடர்ப்பாடுகளைப் பயணத்துறை எதிர்கொள்ள நேரிடலாம் என்றார் அவர். மற்ற நாடுகளைப்போல, விமான நிறுவனங்களும் தங்குவிடுதிகளும் அதிகரித்துவரும் தேவையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகத் தெரிகிறது.
பயணிகள் வருகை உயர்வு, ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களிலும் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
ஹோட்டல்களில் முன்பதிவு அதிகரித்து வருகிறது. 'அக்கார்' குழும ஹோட்டல்களில் இந்த மாதத்தில் இருந்து வாராந்திர முன்பதிவு 20% கூடியுள்ளது.
அதுபோல, சுற்றுலாத்தலங்களிலும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கூடியிருப்பதாக சிங்கப்பூர் சுற்றுலாத்தலங்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கெவின் சியோங் தெரிவித்தார்.

