சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை மட்டுமே கிட்டத்தட்ட 5,500 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு முழுவதும் பதிவானதைவிட அதிகம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு மொத்தம் 5,258 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி சென்ற வாரம் 746 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்கும் செப்டம்பர் ஐந்தாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 937 டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அதற்குப் பிறகு வாராந்திர எண்ணிக்கை சென்ற வாரம்தான் ஆக அதிகமாகப் பதிவானது.
"இப்போதுதான் ஏப்ரல் மாதம் என்பதைக் கருத்தில்கொ்ளும்போது இது கவலை தரும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. வரும் மாதங்களில் டெங்கி தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று திருவாட்டி ஃபூ கூறினார். பொதுச் சுகாதார மன்றத்தின் 'கீப் கிளீன், சிங்கப்பூர்' எனும் சுத்திகரிப்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
சிங்கப்பூர் மோசமான டெங்கி சூழலை எதிர்நோக்குகிறது என்றும் இவ்வாண்டு பெரிய அளவில் டெங்கி பரவல் இடம்பெறக்கூடும் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
பொதுவாக ஓர் ஆண்டின் நடுப்பகுதிக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் இடம்பெறும். இவ்வாண்டு அதற்கு முன்னரே அதிகமான டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 180 பகுதிகளில் தொடர்ந்து புதிய டெங்கி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வந்துள்ளன.
கொசுப் பெருக்கத்துக்கு வகைசெய்யும் பருவநிலை, முன்னர் அதிகம் காணப்படாத 'செரோடைப் 3' வகை டெங்கி கிருமிப் பரவல், அதிகமானோர் இன்னமும் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் கூடுதலானோர் கொசுக் கடிக்கு ஆளாகும் சாத்தியம் இருப்பது ஆகியவை டெங்கி தொற்றுச் சம்பவங்கள் அதிகமாக இருப்பதற்கான மூன்று காரணங்கள் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
டெங்கிக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்காற்றவேண்டும் என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார். கொசுக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடாமல் இருக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அவர் குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டினார்.
குறிப்பாக தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.

