அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டினும் நேற்று உக்ரேனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டனர். போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் ஆக உயரிய அதிகாரிகள் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல்முறை.
"அவர்கள் இங்கு ஒன்றையும் கொண்டு வராமல் இருக்கக்கூடாது," என்று உக்ரேன் அதிபர் வொலொடமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.
"குறிப்பிட்ட சில பொருள்களும் குறிப்பிட்ட ஆயுதங்களும் கொண்டுவரப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் சொன்னார்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் உக்ரேனுக்குப் பயணம் மேற்கொண்டனர். உக்ரேனின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் சண்டை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளிலிருந்து பல ஆயுதங்கள் தனக்கு வழங்கப்படுவதைத் தொடர்ந்து போரில் உக்ரேனால் ரஷ்யாவை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதாக திரு ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.
"உக்ரேனை ஆக்கிரமித்திருப்போர் வெளியேறவேண்டிய நாள் விரைவில் வரும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்," என்று திரு ஸெலென்ஸ்கி தமது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
ஆகக் கடைசி நிலவரப்படி சண்டை தீவிரமடைந்தபோதும் போரில் 24 மணி நேரத்தில் ரஷ்யா அதிக முன்னேற்றம் காணவில்லை என்று பிரிட்டனின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
பதிலடியாக அமைந்துள்ள உக்ரேனியப் படைகளின் தாக்குதல்கள் ரஷ்யாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாகவும் அமைச்சு கூறியது.

