இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டுமென்றும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்றும் பொதுமக்களிடையே போராட்டம் வலுத்து வருகிறது. எனினும், அந்த கோரிக்கையை ராஜபக்சே நிராகரித்தது மட்டும் அல்லாமல் அப்படி இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் அதற்கும் தாமே தலைமை வகிப்பாரென்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
"மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை," என்று அவர் கூறியிருக்கிறார். ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு தாமே தலைவர் என்றும் அவர் கூறினார்.
முக்கிய இறக்குமதிகளைச் செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் அந்நாட்டின் பல்வேறு நகர சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் கூடியுள்ளது. எரிபொருள், மருந்துகள், மின்சார விநியோகம் ஆகியவற்றில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கியதாக சில தகவல்கள் தெரிவித்தன.
மேலும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்த காலிமுகத்திடல் தற்போது மூடப்பட்டுள்ளது. அங்கு ராணுவத்தினரும் காவல்துறையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு பாதுகாப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

