ஆ. விஷ்ணு வர்தினி
பெரும்பாலான கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில், மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குப் படிப்படியாகத் திரும்ப முயன்று வருகின்றனர்.
பெரிய குழுக்களாக மக்கள் இனி கூடலாம் என்பதால், எதிர்வரும் பண்டிகைகளைக் கோலாகலமாக, குடும்பத்தோடு கொண்டாடலாம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரி சீனத் நிஷா, 20.
"ஈராண்டுகளுக்குப் பிறகு நோன்புப் பெருநாளுக்கு குடும்பத்தார் அனைவரையும் வீட்டிற்கு அழைக்க முடியும் என்பதால் இது மறக்கமுடியாத நோன்புப் பெருநாளாக இருக்கும்," என்றார் அவர்.
"சென்ற ஆண்டு என் மகளின் திருமணத்திற்கு உற்றார் உறவினர்கள் 50 பேரை மட்டுமே அழைக்க முடிந்தது. இவ்வாண்டு நடக்க உள்ள என் மகனின் திருமணத்திற்கு 260 பேரை அழைக்க முடியும் என்பது நிறைவளிக்கிறது," என்றார் திருவாட்டி கேத்தரீன், 58.
இருந்தாலும், இடவசதி அளிக்கும் சில அமைப்புகளும் நிறுவனங்களும் இன்னும் உச்ச வரம்பை அமலாக்குவதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.
நாள்தோறும் அதிகாலையில் எழுந்து ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து பணியிடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால், வேலையிடத்திற்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என்றார் திருவாட்டி ஜெ. ஜெயா, 35.
பிள்ளைகள் வீட்டிலிருந்து வேலை பார்த்தபோது குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்க முடிந்ததாகக் கூறினார் அவரின் தாயார் திருவாட்டி வி.கே.நாயகி, 64.
வீட்டில் முடங்கியுள்ள மூத்தோர் பலருக்கும் விதிமுறைகள் தளர்வு ஆறுதல் அளித்துள்ளது.
சமூக நிகழ்வுகளுக்கும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கும் செல்வதில் இல்லத்தரசியான 70 வயது திருவாட்டி விமலாதேவிக்கு மிகுந்த ஆர்வம். வாரம் ஒருமுறையாவது புதியவர்களைச் சந்தித்து, நண்பர்களுடன் பேசி மகிழ்வதை அவர் எதிர்பார்த்திருப்பார். ஈராண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நிகழ்வுகளில் பங்கேற்று, பாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக அவர் சொன்னார்.

