அமெரிக்கப் பயணத்திற்குப்பின் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் பதிவு
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூர் தனது கட்டுப்பாடுகளைப் பேரளவில் தளர்த்திஇருக்கும் நிலையில், வணிகத்திற்காகவும் முதலீடுகளுக்காகவும் சிங்கப்பூர் தனது கதவுகளை முழுமையாகத் திறந்து வைத்துள்ளது என்றும் புதிய முன்னோக்கிய பாதையை வகுத்துள்ளது என்றும் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
"நாம் ஒரு சிறிய, திறந்த நாட்டினர். அதனால்தான் இவ்வுலகின்மீது நாம் தீவிர ஆர்வம் கொண்டுள்ளோம். நமக்கான இடர்கள், வாய்ப்புகள்மீது மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகின்மீதும் நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்," என்று அதிகாரபூர்வ பத்து நாள் அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, தாம் இட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் வோங் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் கொடியை வெளிநாடுகளில் பறக்க விடுவதிலும் அனைத்துலகப் பங்காளிகளுடன் உறவுகளை மறுவுறுதிப்படுத்துவதிலும் பொருளியல் முதல் நீடித்த நிலைத்தன்மை, புத்தாக்கம் வரையிலான புதிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதிலும் தாம் மகிழ்ச்சியடைவதாக திரு வோங் கூறியுள்ளார்.
"இவையெல்லாம் உலகத்துடனான நமது பிணைப்புகளை வலுப்படுத்தவும் நம் மக்களுக்கு அதிக வாய்ப்புகளை ஈர்க்கவும் உதவும்," என்றார் அவர்.
இம்மாதம் 16 முதல் 25ஆம் தேதிவரை வாஷிங்டனுக்கும் நியூயார்க்கும் திரு வோங் பயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் குழுவை வழிநடத்துபவராகத் தேர்வுசெய்யப்பட்டபின் அவர் மேற்கொண்டு முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.
அமெரிக்கப் பயணத்தின்போது, உலக வங்கி-அனைத்துலகப் பண நிதியக் கூட்டங்களிலும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மைய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திலும் திரு வோங் பங்கேற்றார்.
உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் அவரது மூத்த நிர்வாகக் குழு, அனைத்துலக நிதி ஒத்துழைப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் மக்தர் டியோப், பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் மத்தாயஸ் கோர்மன், உலக வங்கிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான அன்ஷுலா கன்ட் ஆகியோரை அமைச்சர் வோங் சந்தித்தார்.
அத்துடன், இந்தோனீசிய நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யாணி இந்திராவதி, மலேசிய நிதியமைச்சர் ஸஃப்ருல் அஸிஸ், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜப்பானிய நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, பிலிப்பீன்ஸ் நிதியமைச்சர் கார்லோஸ் டொமிங்கெஸ் உட்பட ஆசிய பசிபிக் நாடுகளின் நிதி அமைச்சர்களையும் திரு வோங் சந்தித்துப் பேசினார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்தும் பொருளியல் ஒத்துழைப்பு குறித்தும் அமெரிக்க உயரதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசனை செய்தார்.
அனைத்துலக அளவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியாதரவு வழங்குவதைக் கண்காணிக்கும் நிதிச் செயல் பணிக்குழுவின் அமைச்சர்நிலைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
ஐநாவிற்கான சிங்கப்பூரின் நிரந்தரத் தூதரகம் நியூயார்க்கில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டு, அங்கு வசிக்கும் சிங்கப்பூரர்களையும் அமைச்சர் வோங் சந்தித்தார்.
"பல்வேறு பொறுப்புகளை வகித்தபடி, வெளிநாடுகளில் சிங்கப்பூரர்கள் தம் நாட்டுக் கொடியை உயரப் பறக்க விடுவதைக் கண்டு மகிழ்ந்தேன். சிங்கப்பூர் உணர்வை வலுவாக வைத்திருப்போம்!" என்றும் திரு வோங் பதிவிட்டுள்ளார்.

