இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி, அரசியல் நெருக்கடி யாகிவிட்டது. அந்த நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரி நேற்று பொது வேலை நிறுத்தம் பெரிய அளவில் நடந்தது.
தலைநகரில் நிறுவனங்கள் செயல்படவில்லை. ஆசிரியர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. பொதுப் போக்குவரத்து தடைபட்டது.
இலங்கை பெரும் கடனில் சிக்கிவிட்டது. கையிருப்பு இல்லை. போதுமான அளவுக்கு உணவு, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவும் வழியில்லை. அந்த நாடு கிட்டத்தட்ட நொடித்துபோகும் நிலைக்கு வந்துவிட்டது.
இதற்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் அவருடைய குடும்பமும்தான் காரணம் என்றும் அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மார்ச் 31ஆம் தேதி முதலே போராட்டங்கள் நடந்துவருகின்றன.
அதிபர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். இருந்தாலும்கூட அதிபர் பதவி விலக மறுத்து வருகிறார். இந்த நிலையில், அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக பல துறைகளையும் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
துறைமுகம், ரயில்வே, பெட்ரோலியம், சுகாதாரம், வங்கி, கல்வி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளையும் சேர்ந்தவர்கள் இலங்கை முழுவதும் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
அதிபர் அவருடைய சகோதரரான பிரதமர் தவிர அமைச்சரவை முழுவதும் இம்மாத தொடக்கத்தில் பதவி விலகியது. ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கலாம் என்று எதிர்த் தரப்பிற்கு அதிபர் அழைப்பு விடுத்து இருக்கிறார். ஆனால் அதிபரின் தலைமையில் அத்தகைய ஓர் அரசாங்கத்தை அமைக்க எதிர்த்தரப்புகள் விரும்பவில்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்பினர் தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை மெய்பித்தால் பதவி விலகத் தயார் என்று ராஜபக்சே சவால் விடுத்து வருகிறார்.
ஆனால், எதிர்த்தரப்பினர் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் சேர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை.
பொருளியல் நிலவரம் இந்த அளவுக்கு மோசமானதற்கு உக்ரேன் போரும் கொவிட்-19 தொற்றும்தான் காரணம் என்று அரசாங்க அதிகாரிகள் கூறி வருகிறார்கள்.
தாங்கள் அனைத்துலக பண நிதியம் போன்ற அமைப்புகளுடன் பேசி வருவதாகவும் அவர்கள் கூறி வருகிறார்கள்.
அரசியலில் சக்தி வாய்ந்த ராஜபக்சே குடும்பம் இலங்கையை 30 மாதங்களிலேயே திவாலாக்கிவிட்டதாக எதிர்த்தரப்பினர் குறைகூறி வருகிறார்கள்.

