நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அதிபர் ஹலிமா வேண்டுகோள்
வேலைச்சூழலின் அடிப்படையை கொவிட்-19 பெருந்தொற்று மாற்றிவிட்ட நிலையில், அதற்கேற்ப முதலாளிகளும் ஊழியர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தமது மே தினச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலாவதாக, வீட்டிலும் பணியிடத்திலுமாக வேலைசெய்யும் கலப்பு நடைமுறை இங்கு தொடரும். பணியிடத்தைவிட்டுத் தொலைவில் இருந்தபடி வேலை செய்ய முடியும் என்பதை இந்தப் பெருந்தொற்று காட்டியுள்ளதோடு, கணவனும் மனைவியும் வேலை செய்யும் குடும்பங்களில் நீக்குப்போக்கான பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும் அது உதவுகிறது என்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள காணொளி வழியாக அதிபர் ஹலிமா தெரிவித்து உள்ளார்.
இரண்டாவதாக, மக்களின் உறவுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வில் வேலை என்பது ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடரும் நிலையில், இனியும் பலர் வேலைக்காக மட்டும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாராக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதனால், தங்கள் பணியாளர்களை நிர்வகிப்பதிலும் நிறைவு அளிக்கும் வகையிலான வேலையிடங்களை உருவாக்கவும் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்து இருக்கிறார்.
மூன்றாவதாக, போதிய அளவில் மற்ற தெரிவுகள் இல்லாததாலும் நீக்குப்போக்கான வேலை முறையாலும் தன்னுரிமைத் தொழில் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், பெரும்பாலும் அத்தகைய வேலைகளால் ஓய்வுக்கால, சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்குப் போதுமான பணத்தைச் சேமிக்க முடிவதில்லை என்ற அதிபர், அத்தகைய ஊழியர்களைச் சிறந்த முறையில் பாதுகாப்பது எப்படி என்ற பிரச்சினையை இப்போது பல நாடுகளும் எதிர்கொண்டு வருவதாகவும் சொன்னார்.
தன்னுரிமை ஊழியர்களைப் பாதுகாக்க சில நாடுகள் சட்டங்கள் இயற்றியிருப்பதை அவர் சுட்டினார்.
"சிங்கப்பூரில் இப்போதைக்கு நமது சமூகப் பாதுகாப்பானது பெரும்பாலும் முழுநேர வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதால் இந்தப் பிரச்சினையைக் கையாள்வது முக்கியம். அதே நேரத்தில், இன்றைய வேலைச் சந்தையானது பலவகைப்பட்டதாகவும் ஒழுங்குபடுத்தப்படாததாகவும் உள்ளது," என்று அதிபர் ஹலிமா கூறினார்.
இதனிடையே, எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் தொழில் நிலைமை மேம்படலாம் என்றாலும், உலகமயமாக்கலுக்கு எதிரான போக்காலும் மாறிவரும் புவிசார் அரசியல் நிலவரத்தாலும் சிங்கப்பூர் உலக அளவிலான சவால்களை எதிர்நோக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 பரவலால் ஏற்பட்ட விநியோகத் தொடர் இடையூறுகளும் உக்ரேன் போரும் உள்நாட்டிலேயே பொருள்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு நாடுகளைத் தள்ளியிருக்கிறது என்றும் அமெரிக்கா-சீனா இடையே மோசம் அடைந்து வரும் உறவு, தொழில்நுட்பத்தையும் விநியோகத் தொடரையும் பிரித்துவிட்டது என்றும் திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
எரிபொருள், பண்டங்கள் விலை அதிகரிப்பால் பணவீக்கமும் உயர்ந்திருப்பது பொருளியல்களையும் சமூகப் பிணைப்பையும் அச்சுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளர்.
"வரும் ஆண்டுகளில் உலக அரங்கில் தனது இடத்தையும் இணக்கமான போக்கையும் உறுதிசெய்ய, இந்தச் சவால்களை எல்லாம் சிங்கப்பூர் எவ்வாறு சமாளிக்கிறது என்பது முக்கியம்," என்றார் அதிபர்.
அவ்வகையில், தேர்ச்சிமிக்க, கண்ணியமான, பொருத்தமாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஊழியரணியையும் நல்ல உள்கட்டமைப்பையும் தொழில்செய்ய உகந்த சூழலையும் கொண்டிருப்பது சிங்கப்பூருக்குச் சாதகமான அம்சங்கள் என்று அவர் சொன்னார்.
தொழில்நுட்பம், புத்தாக்கம், மின்னிலக்கமயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டவும் சிங்கப்பூர் பணியாற்றி வருவதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
"இறுதியாக, பொருளியல் நிலைத்தன்மைக்கும் தொழில்நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்குவதற்குமான நல்ல தொழில் மேலாண்மை உறவுகளைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது," என்று அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

