வடஇந்தியாவில் வரும் நாள்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தாண்டலாம் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
"கடந்த மாதம் சராசரி அதிகபட்ச வெப்பநிலையாக வடமேற்கு, மத்திய இந்தியாவில் முறையே 35.90 டிகிரி செல்சியசும் 37.78 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் இதுவே ஆக அதிகம்," என்று வானிலை ஆய்வியல் தலைமை இயக்குநர் டாக்டர் எம்.மொகபத்ரா கூறினார்.
வழக்கமாக, மே மாதம்தான் ஆக வெப்பமான மாதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பல மாநிலங்களிலும் நேற்று முன்தினம் வெப்பநிலை 46 டிகிரி செல்சியசுக்குமேல் பதிவானது. ஆக அதிகமாக, உத்தர பிரதேச மாநிலத்தின் பாந்தாவில் 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (46.4), ஜான்சி (46.2), ராஜஸ்தானின் கங்காநகர் (46.4), மத்தியப் பிரதேசத்தின் நவ்காங் (46.2), மகாராஷ்டிராவின் சந்திரபூர் (46.4) ஆகிய இடங்களில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியசைத் தாண்டியது. குருகிராமில் இதுவரை இல்லாத அளவில் 45.9 டிகிரி வெப்பநிலை பதிவானது.
டெல்லி சஃப்தர்ஜங் வானியல் ஆய்வகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த 12 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தின் ஒருநாளில் பதிவான ஆக அதிகபட்ச வெப்பநிலை இதுதான்.
இப்படிக் கடுமையான அனல் வீசும் நிலையில், நாட்டின் மின்சாரத் தேவையானது முன்னெப்போதும் இல்லாத அளவாகக் கடந்த வியாழனன்று 204.65 கிகாவாட்டாக உயர்ந்தது.
தமிழ்நாட்டிலும் வெயில் தாண்டவம்
இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் வெயில் உக்கிரம் காட்டி வருகிறது. அதிகபட்சமாக வேலூரிலும் கரூர் பரமத்தியிலும் நேற்று முன்தினம் 106 டிகிரி ஃபாரன்ஹைட் (41.1 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவானது. திருத்தணி, ஈரோடு, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹைட்டைத் தாண்டியது.

