சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே இன்று முதல் கிட்டத்தட்ட 240 டாக்சிகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் தேதிவரை எல்லை தாண்டி டாக்சி ஓட்ட 156 மலேசிய டாக்சி ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அதேபோல, தமது சங்கத்தைச் சேர்ந்த 80 சிங்கப்பூர் டாக்சி ஓட்டுநர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக சிங்கப்பூர்-ஜோகூர் டாக்சி சேவை வழங்குநர் சங்கத் தலைவர் டெங் கோக் டை, 71, கூறினார்.
இத்தகைய டாக்சிகளில் செல்ல விரும்பும் சிங்கப்பூர் பயணிகள் பான் சான் ஸ்திரீட் முனையத்தில் ஏறலாம் அல்லது கம்ஃபர்ட்டெல்குரோ, டிரான்ஸ்கேப், ஸ்ட்ரைட்ஸ் டாக்சி அல்லது பிரைம் டாக்சி நேரடித் தொலைபேசி எண் வழியாகத் தொடர்புகொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற, எல்லை தாண்டி இயங்கவல்ல சிங்கப்பூர் டாக்சிகள் மட்டுமே மலேசியா செல்லலாம். அவை ஜோகூர் பாருவில் உள்ள லர்கின் டாக்சி முனையத்திற்கு மட்டுமே செல்ல முடியும். அங்கு இருந்து அவை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் வரலாம். அதேபோல், சிங்கப்பூருக்கு வர மலேசிய டாக்சிகளும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவை பான் சான் ஸ்திரீட் முனையத்திற்கு மட்டுமே செல்லலாம்.
கொவிட்-19 பரவலுக்குமுன், இத்தகைய எல்லை தாண்டி இயங்கும் டாக்சிகள் நிலையான கட்டணமாக $48 வசூலித்தன. இனியும் அதே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திரு டெங், அதனை $60 ஆக உயர்த்தக் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார்.

