சிங்கப்பூர்-ஜோகூர் பாரு இடையே பொதுப் பேருந்துச் சேவை நேற்று தொடங்கியது.
உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் இருந்து பலரும் உற்சாகத்துடன் பேருந்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர்.
உட்லண்ட்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து ஜோகூர் பாரு சோதனைச்சாவடி வரை சேவை வழங்கிய பல பேருந்துகளும் நேற்று கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன.
சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையிலான பொதுப் பேருந்துச் சேவைகள் கொவிட்-19 காரணமாக 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகளில் நேற்று பயணம் செய்தவர்களில் அன்றாடம் போய் வருவோரும் தாயகம் திரும்பும் மலேசியர்களும் அதிகம்.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட டாக்சி சேவையும் நேற்று மீண்டும் தொடங்கியது.
பொதுப் பேருந்துச் சேவை தொடங்கி இருப்பதால் குறைந்த செலவில் வசதியாக எல்லை கடந்து சென்று வர பலருக்கும் நன்மை கிடைத்து இருக்கிறது.
பேருந்தில் நேற்று பயணம் செய்தவர்களில் ஒருவரான பத்மநாதன் என்ற சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர், இரண்டு ஆண்டுகளில் முதன்முதலாக நேற்றுத்தான் ஜோகூர் பாரு சென்றதாகக் கூறினார்.
இவ்வேளையில், கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் ஏறக்குறைய 280,000 பயணிகள் சிங்கப்பூரில் இருந்து தரை எல்லை வழியாக மலேசியாவுக்குச் சென்று இருக்கிறார்கள்.
குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது. அடுத்த சில நாள்களில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் சிங்கப்பூருக்குத் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் தரை எல்லைச் சாவடிகளில் போக்குவரத்துத் தேக்கம் எதிர்பார்க்கப் படுவதாகவும் ஆணையம் தெரிவித்தது.
முன்னதாகவே திட்டமிட்டு நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கும் புதன்கிழமை அதி காலை 1 மணிக்கும் இடையில் உச்ச நேரத்தில் சிங்கப்பூருக்குத் திரும்புவதை தவிர்த்துக்கொள்ளும்படி பயணிகளுக்கு ஆணையம் ஆலோசனை கூறியது.