பெருநாள் தொழுகையில் சகோதரத்துவ நெருக்கம்

2 mins read
62b22a12-c95e-4ec5-a91b-20bfa3a2ebc3
இடைவெளிக் கட்டுப்பாடு அகற்றப்பட்ட நிலையில் டன்லப் ஸ்திரீட் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகை. படம்: திமத்தி டேவிட் -

ஈராண்டுக்குப் பின் திரும்பிவந்த நிம்மதி

இரண்டு ஆண்­டு­களில் இரண்டு நோன்­புப் பெரு­நாள்­கள், இரண்டு ஹஜ்­ஜுப் பெரு­நாள்­களை நோய்ப் பர­வல் சூழ­லில் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் அமை­தி­யும் தனி­மை­யும் சூழ கொண்­டா­டிய சிங்­கப்­பூர் முஸ்­லிம்­கள் புத்­து­ணர்ச்சி தரும் மன­நி­றை­வான பெரு­நாளை இன்று வர­வேற்­கின்­ற­னர். முப்­பது நாட்­களும் நோன்பு நோற்று, இர­வு­நேர தரா­விஹ் தொழு­கை­களை தின­சரி மேற்­கொண்டு உற்­றார், உற­வி­னர், குடும்­பத்­தி­ன­ரு­டன் புனித ரம­லா­னைக் கடந்து ஈகைப் பெரு­நாளை விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டு­வ­தில் அள­வில்லா குதூ­க­லத்­தில் திளைத்­துள்­ள­னர் முஸ்­லிம்­கள்.

சிங்­கப்­பூரே முடங்­கிய அதி­ரடி நட­வ­டிக்­கை காலத்­தில் பள்­ளி­

வா­சல்­கள் மூடப்­பட்டு, வீட்­டி­லேயே தொழுது, பெரு­நாளை 2020ஆம் ஆண்டு வர­வேற்ற நினை­வ­லை­கள் மன­தில் பதிந்த நிலை­யில், பின்­னர் 50, 100, 250 பேர் என குறிப்­பிட்ட எண்­ணி­க்கை­யில் பதிவுசெய்து பள்­ளி­வா­சல்­களில் தொழுத நாள்­

க­ளை­யும் நினைத்­துப்­பார்த்து, இன்று இடை­வெளி இன்றி, தோளுக்­குத் தோள் வரி­சை­களை நேரா­க­வும் நெருக்­க­மா­க­வும் சகோ­த­ரத்­து­வத்­து­டன் நின்று தொழு­கையை மேற்­கொண்­ட­தில் கண்­க­லங்­கிய மன­நி­றைவை மக்­கள் பெற்­ற­னர்.

"கண்­கொள்­ளாக் காட்­சி­யைப் பார்த்து மெய்­சி­லிர்க்­கிறது. முப்­பது நாள் தரா­விஹ் தொழுகை, ரம­லான் 17ஆம் பிறை­யில் பத்ரு ஸஹா­பாக்­கள் இரவு, 27ஆம் பிறை­யில் லைலத்­துல் கத்ரு, கடைசி பத்து பிறை­களில் கியா­முல் லைல் சிறப்பு தொழுகை என அனைத்­தை­யும் சீரும் சிறப்­பு­மாக நடத்தி மக்­க­ளுக்கு முழு­மை­யாக வசதி செய்து­ கொ­டுத்து சேவை­யாற்­றி­ய­தில் நிறை­வாக உள்­ளது," என்று கூறி­னார் லிட்­டில் இந்­தி­யா­வின் டன்­லப் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழுத் துணைத் தலை­வர் திரு முஹம்­மது இத்­ரீஸ்.

வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இந்­தப் பள்­ளி­வா­ச­லில் தமிழ் முஸ்­லிம்­கள் பயான் எனும் சிறப்­பு­ரை­யைத் தாய்­மொ­ழி­யாம் தமிழ்­மொ­ழி­யில் கேட்டு பயன்­பெற சிங்­கப்­பூ­ரின் அனைத்து இடங்­க­ளி­லி­ருந்­தும் திர­ளாக வரு­வது வழக்­கம்.

தேசிய நினை­வுச் சின்­ன­மான இந்­தப் பள்­ளி­வா­சல் தொழுகைக்­காக வரு­ப­வர்­கள் தங்­கள் உற­

வி­னர்­க­ளை­யும் நண்­பர்­க­ளை­யும் சந்­தித்து ஆரத்­த­ழு­வும் உற­வு­க­ளின் பால­மா­க­வும் விளங்­கு­கிறது.

"புனித நோன்­புப் பெரு­நா­ளில் மக்­கள் பல­ரை­யும் சந்­தித்து பெரி­ய­வர்­க­ளி­டம் வாழ்த்­தும் துஆ­வும் பெறு­வது மாபெ­ரும் வர­மா­கக் கருது ­கி­றேன். எவ­ரை­யும் சந்­திக்­கா­மல் தனித்து கொண்­டா­டும் நிலை­யின்றி வீட்­டிற்­குப் பல­ரை­யும் அழைத்து இன்று பெரு­நா­ளைக் கொண்­டாட இருக்­கி­றோம். வீட்­டிற்கு வரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டது மிகுந்த மன­நிம்­ம­தி­யைத் தந்­துள்­ளது," என்­றார் 34 வயது வணி­கர் முஹம்­மது ரிஸ்­வான்.

புத்­தா­டை­கள் அணிந்து, பல வகை­யான உண­வ­ருந்தி பெரு­நாளை கிட்­டத்­தட்ட 20 பேரு­டன் கொண்­டா­ட­வி­ருக்­கி­றார் 25 வயது ஃபர்­ஹானா ஃபர்­வின்.

"இனிப்­புப் பல­கா­ரங்­க­ளைக் கடந்த நான்கு நாள்­க­ளாக அம்­மா­வு­டன் சேர்ந்து செய்­துள்­ளேன். வீட்­டைச் சுத்­தம் செய்து புதிய விரிப்­பு­களை கூடத்­தில் போட்டு, அலங்­கார விளக்­கு­களைப் பொருத்தி வரு­கை­யா­ளர்­க­ளை வரவேற்கத் தயா­ராக இருக்­கி­றோம்," என்று குதூ­க­லத்­து­டன் பகிர்ந்­தார் அவர்.

எல்லா முஸ்லிம் மக்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முரசும் எல்லா முஸ்லிம்களுக்கும் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.