சாங்கி விமான நிலையத்தில் ஏப்ரல் மாத நிலவரம்: கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த அளவில் 40 விழுக்காட்டை நெருங்கியது
இவ்வாண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும், ஏப்ரல் மாதத்தில் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்தோர் எண்ணிக்கை இருமடங்கிற்கும் மேல் இருந்தது என்றும் கொவிட்-19 பரவலுக்கு முந்திய நிலையில் 40 விழுக்காட்டை நெருங்கியது என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் சென்ற மாதம் 1ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூர் தனது கதவுகளைத் திறந்துவிட்டதை அடுத்து, பயணிகள் விமானப் போக்குவரத்து நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் சாங்கி விமான நிலையம் வழியாகப் பயணம் செய்தோர் எண்ணிக்கை, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த நிலையில் 18 விழுக்காடாக இருந்தது.
ஈராண்டுகளுக்குப்பின் நேற்று முதன்முறையாக இடம்பெற்ற சாங்கி விமான நிலைய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் ஈஸ்வரன் இவ்விவரங்களை வெளியிட்டார்.
விமானப் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், இவ்வாண்டு இறுதிக்குள் கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலையில் 50 விழுக்காட்டை எட்டிவிட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் கொரோனா பரவத் தொடங்குமுன், 68.3 மில்லியன் பேர் சாங்கி விமானம் நிலையம் வழியாகப் பயணம் செய்தனர்.
மீண்டும் விமானப் போக்குவரத்து சூடுபிடிக்கத் தொடங்கிஇருக்கும் நிலையில், அதற்கேற்ப விமான நிலையச் செயல்பாடுகளை விரைந்து அதிகப்படுத்துவது எளிதான விஷயமல்ல என்று திரு ஈஸ்வரன் சொன்னார்.
"சாங்கி போன்ற அனைத்துலக விமானப் போக்குவரத்து மையத்தில் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. ஆயினும், அவ்வேலையைச் செய்து முடிப்பதில் நமது விமானத்துறைப் பங்காளிகளும் தங்களால் ஆனமட்டும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்," என்றார் அமைச்சர்.
அதற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு உண்டு எனக் குறிப்பிட்ட அவர், ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் சாங்கியின் தனித்த அடையாளமான தனிச்சிறப்புமிக்க, இடையறாப் பயண அனுபவத்தை மீண்டும் கொண்டுவர முடியும் என்றும் சொன்னார்.
உடனடி மீட்சி நடவடிக்கைகளுடன், கொவிட்-19 பரவலுக்குப் பிந்திய உலகிலும் சாங்கி விமான நிலையம் செழித்தோங்குவது முக்கியம் என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
அதற்கு இணைப்புத்திறன் மிக முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கேற்ப சம்பந்தப்பட்ட விமான நிறுவனப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி, விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பை அதிகரிக்க கடப்பாடு கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
"முந்திய இணைப்புகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி, நமது கட்டமைப்பை விரிவாக்கவும் விமாச்ன சேவைகளை அதிகரிக்கவும் விமானச் சேவை நிறுவனங்களுடன் புதிய பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டும்," என்றார் அமைச்சர்.
பெருந்தொற்றுச் சூழலிலும் கடந்த ஆண்டு இங்கு புதிய ஏழு புதிய பயணிகள் விமானச் சேவை நிறுவனங்கள் இங்கு செயல்படத் தொடங்கியதாகவும் பஹ்ரேன் மற்றும் வான்கூவருக்குப் புதிய பயணிகள் விமான இணைப்புகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கொவிட்-19 பரவலுக்குப் பிறகு சாங்கி விமான நிலையம் வழியாக இயக்கப்படும் சரக்கு விமானங்களின் எண்ணிக்கையும் மும்மடங்காகியுள்ளது.
அத்துடன், புதிதாக ஆறு சரக்கு விமானச் சேவை வழங்குநர்களையும் சாங்கி விமான நிலையம் ஈர்த்துள்ளது.
டிஎச்எல் எக்ஸ்பிரஸ் நிறுவனமும் ஃபெடெக்ஸ் நிறுவனமும் இங்கு தங்களது கட்டமைப்புகளை விரிவுபடுத்தியுள்ளன.
இம்மாதம் 1ஆம் தேதி நிலவரப்படி, 47 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 125 நகரங்களுடன் சிங்கப்பூரை இணைக்கும் வகையில், 82 விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாரத்திற்கு 3,300க்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகின்றன.

