நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் முன்னேற்றத்துக்கான வழிகள் என்றும் மேலும் அதிக பெண்களும் முதிர்ச்சி அடைந்த நிலையில் உள்ள ஊழியர்களும் ஊழியரணியில் சேர அந்த ஏற்பாடுகள் உதவும் என்றும் குழு விவாதம் ஒன்றில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
குத்தகைப் பணியாளர் மற்றும் தற்காலிக ஊழியர்களை உள்ளடக்கிய பொருளியலின் எதிர்காலம் குறித்தும் பலதரப்பட்ட வேலைகளை அது எப்படி உள்ளடக்க முடியும் என்பது பற்றியும் அவர் பேசினார்.
பார்க்ராயல் கலெக்ஷன் மரினா பே ஹோட்டலில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டணி தொடக்கத்தின் தொடர்பில் நடைபெற்ற குழு விவாதம் ஒன்றில் டாக்டர் டான் பங்கேற்றார்.
முதலாளிகளும் ஊழியர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான யோசனைகளைப் பகிர்ந்துகொள்ள அந்தக் கூட்டணி வழிவகை காணும்.
அத்துடன், அரசாங்கம், முதலாளிகள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய சிங்கப்பூரின் முத்தரப்பு உணர்வைப் பேணவும் அது நம்பிக்கை கொண்டுள்ளது.
வருங்கால வேலை குறித்து விளக்கிய டாக்டர் டான், அடுத்த கட்ட முக்கிய மாற்றம் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளாகவே இருக்கும் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்தார்.
அத்தகைய தரநிலைகளை முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து மனிதவள அமைச்சு உருவாக்கி உள்ளது. இவற்றை ஒவ்வொருவரும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்போதிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் சில வழிகாட்டி நெறிமுறைகளை நாம் உரு வாக்கிவிட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
பராமரிப்புப் பொறுப்புகளில் ஈடுபட்டு இருக்கும் பெண்கள், முதிர்சியடைந்த ஊழியர்கள் போன்ற அதிகமானோரை ஊழியரணியில் கொண்டுவர நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் ஒரு நல்ல வழி என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் 25 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட 260,000 பெண்களும் 65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 120,000 முதிர்ச்சியடைந்த ஊழியர்களும் வேலை பார்க்கவில்லை என்பதை அமைச்சர் சுட்டினார்.
"துணிச்சலான, அறிவுபூர்வமான, மேம்பாடான நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இந்த இரு குழுவினரையும் சேர்த்து நமது ஊழியரணிக்கு 400,000 பேரை மீண்டும் கொண்டுவர முடியும்.
"இது நமது பொருளியலுக்கும் தொழில்துறைக்கும் எந்த அளவுக்கு வலு சேர்க்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவரான ராபர்ட் யாப், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நிறைவேற்றுவதன் தொடர்பில் ஒவ்வொருவரும் வெளிப்படையாகவும் புத்தாக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று விவாதத்தின் போது தெரிவித்தார்.

