சம்பளப் பிரச்சினைகள், வேலையில் ஏற்படக்கூடிய காயம் தொடர்பான பிரச்சினைகள், சட்டப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளை வழங்குவதற்காக முதல் சட்ட உதவிக்கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
லிட்டில் இந்தியாவில் உள்ள அங்கூலியா பள்ளிவாசலில் அந்தக் கூடத்தை சட்டக் கழகத்தின் இலவச பொதுச் சேவை அமைப்பு நிர்வகித்து நடத்துகிறது.
அந்தக் கூடம் இரு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். அனைத்து சமயங்களையும் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அந்தக் கூடத்தின் சேவையைப் பெறலாம்.
தமிழ், இந்தி, வங்காளம் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்புச் சேவைகளும் அங்கு கிடைக்கும்.
சட்ட உதவிக்கூடம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்தச் சட்ட உதவிக்கூடத்தில் பணியில் இருப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
"அந்த அதிகாரிகள் கடுமையான விவகாரங்களைக் கையாளுவார்கள். ஊழியர்களின் பிரச்சினைகள் கவனிக்கப்படும் என்று அவர்கள் உத்தரவாதம் அளிப்பார்கள்," என அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டில் வெளிநாட்டு ஊழியர் குழுமம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அந்த அமைப்பு கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கு இணையம் வழியாக சட்ட உதவிகளை வழங் கும் நடைமுறையைப் பரிசோதித்துப் பார்த்தது என்று அமைச்சர் தெரிவித்தார்.
சட்டக் கழகத்தின் இலவச பொதுச் சேவை அமைப்பு நிர்வகித்து நடத்தும் இத்தகைய கூடங்கள் 260க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உதவி இருக்கின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"தவறிழைக்கும் முதலாளிகளிடம் மனிதவள அமைச்சு கடுமையாக நடந்துகொள்ளும்.
"அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்காது. உதவி தேவைப்படும் ஊழியர்கள் நிராகரிக்கப்படமாட்டார்கள்," என்று திரு ஸாக்கி தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று தொடங்கப்பட்ட சட்ட உதவிக்கூடம் மார்ச்முதல் செயல்பட்டு வருகிறது. அதில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்களைப் பதிந்துகொண்டு இருக்கிறார்கள்.
இது பற்றி கருத்துரைத்த சட்டக் கழக இலவச சட்ட உதவிச் சேவை அமைப்பின் தலைவர் கிரிகோரி விஜயேந்திரன், வழிபாட்டு இடங் களைப் பாதுகாப்பானவையாக பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் கருதுவதால் பள்ளிவாசலில் சட்ட உதவிக் கூடத்தை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக நேற்றைய நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அந்தக் கூடம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 10 மணியில் இருந்து பிற்பகல் 12.30 மணி வரை செயல்படும்.
வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு சென்று ஆலோசனைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது https://form.jotform.com/Lawsocprobono/MWLC என்ற இணைய முகவரி மூலமும் தங்களைப் பதியலாம்.

