கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 78 விழுக்காட்டை எட்டின
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் பேருந்து, ரயில் பயணங்கள் கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 78 விழுக்காட்டை எட்டின.
இவ்வாண்டு ஜனவரியின் முதல் வாரத்தில் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 67 விழுக்காடாக இருந்தன. அப்போது 50 விழுக்காடு ஊழியர்கள் வேலையிடத்திற்குத் திரும்பலாம் என்றும் ஐந்து பேர் வரை ஒன்றுகூடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுத் தளர்வின் ஒரு பகுதியாக, எல்லா ஊழியர்களும் வேலையிடம் திரும்பலாம் என்றும் ஒன்றுகூடல்களுக்கான எண்ணிக்கை வரம்பு நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அண்மைய தகவல்கள்படி, கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், காலை உச்ச நேரத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கையும் கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 76 விழுக்காட்டை எட்டியது.
ஒப்புநோக்க, கடந்த ஜனவரி முதல் வாரத்தில் இது 59 விழுக்காடாக இருந்தது.
என்றாலும், பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் கொவிட்-19க்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் சற்று காலம் ஆகலாம் எனத் தெரிகிறது.
பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தும் முறையில் நிரந்தர மாற்றம் ஏற்படுமா என்பதைக் கணிக்க பேருந்து, ரயில் பயணங்கள் எண்ணிக்கையைத் தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும் அரசாங்கமும் கூறியுள்ளன.
கொவிட்-19 பெருந்தொற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் பொதுப் போக்குவரத்துப் பயணங்களையும் வருவாயையும் பெரிதும் பாதித்து உள்ளன.
2010க்குப் பிறகு 2020ஆம் ஆண்டிலும் 2021ஆம் ஆண்டிலும் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் ஆகக் குறைவாகப் பதிவாகின.
2020/2021 நிதியாண்டில் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 60 விழுக்காடாக இருந்தது. இதனால் வருவாய் 30 விழுக்காடு குறைந்ததாக ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஏப்ரல் கடைசி வாரத்தில் டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகளைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் 81 விழுக்காடாக இருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
ஆண்டு தொடக்கத்திலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கைதான் பதிவாகியிருந்தது.
சாலைகளில் செல்லும் டாக்சிகளின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு குறைந்துள்ளது. 2019ல் 18,542ஆக இருந்த அந்த எண்ணிக்கை, இவ்வாண்டு ஜனவரியில் 14,847ஆகவும் மார்ச்சில் 14,603ஆகவும் குறைந்தது.
என்றாலும், தொழில்முறை உரிமம் வைத்திருக்கும் டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்புநோக்க இவ்வாண்டு மார்ச்சில் சற்று அதிகரித்ததாக ஆணையத்தில் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் நிலவரப்படி, 94,513 டாக்சி ஓட்டுநர்கள் தொழில்முறை உரிமம் வைத்திருந்தனர். ஜனவரியில் இது 94,111ஆக இருந்தது.
தனியார் வாடகை கார் ஓட்டுநர்களைப் பொறுத்தமட்டில், கடந்த மார்ச் மாதம் 48,300 பேர் அத்தகைய உரிமங்களை வைத்துஇருந்தனர். ஜனவரியில் இந்த எண்ணிக்கை 47,913ஆக இருந்தது.
எனினும், பெருந்தொற்றுச் சூழலில் டாக்சிகளின் எண்ணிகை குறைந்துள்ளது. 2020ல் 18,500ஆக இருந்த அந்த எண்ணிக்கை, தற்போது 14,600ஆகக் குறைந்துள்ளது.

