தமிழ்நாடு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளியலாக மாற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு நிறைவேற மாநில அரசு தீவிர மாக முயன்றுவருவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பின் தெற்கு வட்டார விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. அதில் உரையாற்றிய முதல்வர், தமிழக அரசின் பொருளியல் இலக்கு நிறைவேற மாநிலத்தின் ஏற்றுமதி கூட வேண்டும் என்றார்.
இந்திய ஏற்றுமதிகளில் 27%க்கும் அதிக பங்கைத் தென் மாநிலங்கள் வகிக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தப் பங்கு 35%ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மண்டலத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் திகழ்கிறது. தமிழக ஏற்றுமதி $26 பில்லியனாக இப்போது இருக்கிறது. இது $1 டிரில்லியனாக அதிகரிக்க வேண்டும். இதற்கு அதிக முதலீடு மாநிலத்திற்கு வரவேண்டும்.
தொழிலைத் தொடங்க கவர்ச்சிகரமான திட்டங்களையும் அணுகுமுறையையும் மாநில அரசு கைக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின், இந்த முயற்சிகளைப் பல கோணங்களிலும் மாநில அரசு முடுக்கிவிட்டு இருப்பதாகக் கூறினார்.
மொத்தம் 35,000 பேரைக் கொண்ட இந்திய ஏற்றுமதி நிறுவனக் கூட்டமைப்பில் 5,000 நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர் சுட்டினார்.
இதனிடையே, அண்மைய மத்திய கிழக்கு பயண வெற்றியைத் தொடர்ந்து முதலீடுகளைக் கவர்வதற்காக பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் முதல்வர் விரைவில் பயணம் மேற்கொள்வார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.