கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூர் இந்திய நிறுவனங்களின் ஒருமித்த குரலாக ஒலிக்க உள்ள சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் சம்மேளனத்தை (எஃப்எஸ்ஐஓ) நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்த அதிபர் ஹலிமா யாக்கோப், சிங்கப்பூரும் இந்தியாவும் பசுமைப் பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் போன்றவற்றில் இணைந்துப் பணியாற்றி அடுத்த கட்ட வளர்ச்சியைக் காணலாம் என்றார்.
கொவிட்-19 சிரம காலத்துக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்கி, உலகத்துடன் மீண்டும் இணையும் இத்தருணத்தில் வணிகங்களும் ஊழியர்களும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிபர் கூறினார்.
அந்த வாய்ப்புகளில் ஒன்று இரு நாடுகளுக்கும் முக்கியமான பசுமைப் பொருளியலில் உள்ளது.
நீடித்த, குறைவான கரிமத்தை வெளியேற்றும் தீர்வுகளின் ஆய்வு மேம்பாடு, அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் சிங்கப்பூரும் இந்தியாவும் ஒத்துழைக்கலாம் என்று திருவாட்டி ஹலிமா விளக்கினார்.
இரு நாடுகளும் அண்மையில் கையெழுத்திட்ட அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கப் புரிந்துணர்வுக் குறிப்பின்கீழ் ஒத்துழைக்க முடியும் என்றும் அவர் கூறினார். அந்தக் குறிப்பின்கீழ் உள்ள திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்கும்.
மேலும், மின்னிலக்கப் பொருளியலில் இரு நாட்டு தனியார் நிறுவனங்கள் சேர்ந்து இரு தரப்புக்கும் நன்மை தரும் தீர்வுகளை உருவாக்கலாம் என்று அதிபர் கூறினார். அதன்வழி, அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய மின்னிலக்கச் சமூகங்களை உருவாக்க முடியும் என்றார் அவர்.
இரு நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான சிங்கப்பூரின் 'பேநவ்'வும் இந்தியாவின் 'யுனைடெட் பே இன்டர்பேஸ்' பாங்காளித்துவத்தையும் அவர் அதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் சம்மேளனத்தின் சின்னத்தை திருவாட்டி ஹலிமா நேற்றைய விருந்து நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
வெளிநாட்டு ஊழியர் பற்றாக்குறை, அதிகரிக்கும் வணிகச் செலவுகள் உள்ளிட்ட இந்திய வணிகர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களில் உதவ சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையும் மேலும் 26 இந்திய அமைப்புகளும் இணைந்து சிங்கப்பூர் இந்திய அமைப்புகள் சம்மேளனத்தை (எஃப்எஸ்ஐஓ) அமைத்துள்ளன.
சிரமமான காலகட்டங்களில் தாக்குப் பிடிப்பதற்கும் ஊழியர்களைத் தக்கவைத்து அவர்களைப் பயிற்சிக்கு அனுப்புவதற்கும் இந்த சம்மேளனம் தனது உறுப்பு அமைப்புகளுக்கு வழிகாட்டவுள்ளது.
2024ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடஉள்ள வர்த்தக தொழிற்சபை, இந்தச் சம்மேளனத்தை உருவாக்கும் பணியில் கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு முன்னரே ஈடுபட்டதாக அதன் தலைவர் டாக்டர் டி. சந்துரு கூறினார். கொவிட்-19 கிருமிப்பரவலால் கூடுதல் வேகத்துடன் இந்தப் புதிய சம்மேளனம் செயல்வடிவம் கண்டது என்றார் அவர்.
சம்மேளனத்தின் மூலம் வர்த்தக தொழிற்சபையின் நிபுணத்துவ, வர்த்தக தொடர்புகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அதன் உறுப்பு அமைப்பான சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் தெரிவித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளியல் மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார் திருவாட்டி ஹலிமா.
சுமார் 500 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் வர்த்தக தொழிற்சபையின் முந்தைய தலைவர்கள் 'ஓய்வுபெற்ற கௌரவத் தலைவர்' என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டனர். திரு ஷபீர் ஹசான்பாய், திரு ஆர் நாராயணமோகன், திரு தவு தயால் குப்தா, திரு விஜய் அய்யங்கார், திரு எம் ராஜாராம் ஆகியோர் இந்தக் கௌரவத்தை வழங்கும் பத்திரத்தை அதிபரிடம் பெற்றனர்.

