சாங்கி விமான நிலையத்திலிருந்து எடுக்கப்படும் டாக்சிகளுக்கு பயணிகள் செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணம், இம்மாதம் 19ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதிவரை $3 அதிகரிக்கப்படும்.
இந்த அதிகரிப்பு பயணிகளின் பயன்பாட்டிற்கு, அதிக டாக்சிகளை வழங்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்சியில் பயணம் செய்வதற்கான கூடுதல் கட்டணம் $5 ஆக உள்ளது. மற்ற நேரங்களில் இக்கட்டணம் $3 ஆக உள்ளது.
இக்கட்டணம் இப்போது முறையே $8, $6 ஆக அதிகரிக்கப்படும்.
சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இக்கட்டண உயர்வுக்கு, வெளிநாட்டுப் பயணங்கள் அதிகரித்து வந்தாலும், டாக்சி ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்திலிருந்து பயணிகளை அழைத்து செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டாததே காரணம் என தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் சுமார் 1.14 மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பின் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது இதுவே முதல் முறை.
அதிகளவு பயணிகள் இருப்பினும் விமான நிலையத்தில் குறைந்த அளவு டாக்சிகளே இருப்பதால், பயணிகளின் காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது.
டாக்சி ஓட்டுநர்கள், விமான நிலையத்திற்கு செல்வதைவிட மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு செல்லும்போது, அதிக வருமானம் ஈட்டமுடிகிறது என்றும் எரிபொருள்களின் விலை உயர்ந்துவிட்டதால் விமான நிலையத்தில் நீண்ட நேரம் டாக்சியின் இயந்திரத்தை ஓடவிடுவது தங்களுக்கு லாபமளிக்காது என்றும் எண்ணுகின்றனர்.
டாக்சி ஓட்டுநர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களுக்குள் விமான நிலையத்திலிருந்து 3 பயணங்களை ஏற்றால், $10 ஊக்கத்தொகையாக வழங்குவது மற்றும் இந்த ஓட்டுநர்களுக்கு காலையில் இலவசமாக காப்பி வழங்குவது போன்ற முயற்சிகளை சாங்கி விமான நிலையக் குழுமம் மேற்கொண்டது.
இந்த முயற்சிகள் கைகொடுக்காமல் போனதால், இந்தக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது.