முன்னைய பிரதமரும் எதிர்த்தரப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான திரு ரணில் விக்ரமசிங்கே, நேற்று மாலை இலங்கையின் பிரதமராகப் பதவி ஏற்றார்.
திரு ரணில் விக்ரமசிங்கே அதிபர் கோத்தபாயவுடன் புதன் அன்று ரகசியச் சந்திப்பை நடத்தியதாக இலங்கை ஊடகங்கள் கூறின.
அதே வேளையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடுத்த அழைப்பைத் தாம் ஏற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா அறிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், அதற்கு நிபந்தனையாக அதிபர் கோத்தபாய பதவி விலக வேண்டும் என்றும் அதிபர் பதவி என்ற ஒன்றே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரின் மகன் நமல் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. இதன்படி, ஆளும் கட்சி அரசியல் புள்ளிகள், முக்கிய அதிகாரிகள் என 17 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் அதிபர் கோத்தபாயவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற நாயகரின் அலுவகம் தெரிவித்தது.
'இலங்கை செல்வதைத் தவிர்க்கவும்'
இதற்கிடையே, தேவை ஏற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதை அடுத்து, வெளியுறவு அமைச்சு நேற்று இந்தப் பயண ஆலோசனையை விடுத்திருந்தது.
அத்துடன் இலங்கையில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புநிலையில் இருக்கும்படியும் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும் அது அறிவுறுத்தியது. ஆர்ப்பாட்டங்களும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களையும் தவிர்க்கும்படி அது குறிப்பிட்டது. இலங்கையில் பல வாரங்களாக அமைதியான முறையில் நடந்து வந்த ஆர்ப்பாட்டங்கள், கடந்த சில நாள்களில் வன்முறைச் சம்பவங்களாக வெடித்தன.
முன்னைய பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் ஆதரவாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய பின்னர், அவர்களும் பதிலுக்குத் தாக்கியுள்ளனர். அந்தச் சம்பவங்களில் குறைந்தது எட்டு பேர் இறந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்துள்ளனர்.

