பிடோக் நார்த் அவென்யூ 2ல் இருக்கும் புளோக் 409ன் நான்காவது மாடி வீட்டில் மூண்ட தீயில் மூன்று வயது குழந்தை உட்பட மூன்று பேர் மாண்டுவிட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் நேற்றுக் காலை சுமார் 6.40 மணிக்கு அங்கு சென்றபோது நால்வர் மயங்கிய நிலையில் காணப்பட்டனர்.
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருள்கள் வீட்டில் நிறைந்து கிடந்தன.
மூன்று வயது கைக்குழந்தையும் அந்தக் குழந்தையின் 34 வயது தாயாரும் 35 வயது ஆடவர் ஒருவரும் சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த ஆடவரும் கைக்குழந்தையும் மருத்துவமனையில் மாண்டுவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
சம்பவ இடத்தில் 56 வயது மாது ஒருவர் மரணமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் குடியிருப்பு பேட்டைக்கான நாடாளுமன்ற உறுப்பினர் டான் கியட் ஹாவ், தீ விபத்து நிகழ்ந்த வீட்டில் ஐந்து பேர் குடியிருந்ததாகத் தெரிவித்தார்.
அந்த வீட்டில் குடியிருந்த தம்பதியர் ஓர் அறையை மூன்று பேருக்கு வாடகைக்கு விட்டு இருந்தனர். தீ மூண்ட வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று பேரையும் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து அதிகாரிகள் காப்பாற்றினர்.
அவர்களுக்கு இலேசான காயம். என்றா லும் மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் மறுத்துவிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து வீடுகளில் வசிக்கும் 60 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் பற்றி புலன் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.