அமெரிக்காவில் இணைய சவால் விளையாட்டு ஒன்றில் பங்கெடுத்த நைலா ஆண்டர்சன் என்ற 10 வயது சிறுமி மரணமடைந்து விட்டதை அடுத்து 'டிக்டாக்' செயலி மீது வழக்குத் தொடுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் மயக்கம் வரும் வரை மூச்சுவிடாதபடி கழுத்தை நெரித்துக்கொள்ள வேண்டும்.
மூன்று மொழிகளில் வல்லமை பெற்ற அறிவுமிக்க சிறுமியான நைலா, அமெரிக்காவில் ஃபிலடெல்ஃபியா நகரில் உள்ள வீட்டில் படுக்கை அறையில் டிசம்பர் 7ஆம் தேதி சுயநினைவின்றிக் கிடந்ததாக மத்திய நீதிமன்றத்தில் மே 12ல் தாக்கலான புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை. 'பிளாக்அவுட் சேலஞ்ச்' எனப்படும் டிக்டாக் சவால் போட்டி அந்த 10 வயது சிறுமியைக் கவர்ந்து ஈர்க்கும் வகையில் இடம்பெற்று இருந்தது. இதனால் அந்தச் சிறுமி இறந்துவிட்டார் என்று புகார் தெரிவிக்கிறது.
இந்த வழக்கில் டிக்டாக்கின் தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனமும் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
என்றாலும் இந்த வழக்கு பற்றி கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பிளாக்அவுட் சேலஞ்ச் போட்டியில் கலந்துகொண்ட இதர நான்கு சிறார்களும் மரணமடைந்து இருப்பதாக அந்தப் புகார் அறிக்கை தெரிவிக்கிறது.
டிக்டாக் சவால் போட்டியில் கலந்துகொள்பவர்கள் காலணியைக் கட்டும் கயிறு போன்ற வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி கழுத்தை இறுக்கிக் கொள்கிறார்கள்.
தங்களுக்கு மயக்கம் வரும் வரை ஒரு சில விநாடிகளுக்கு அவ்வாறு செய்கிறார்கள். இந்தச் சவால் சில நேரங்களில் மரணத்தில் முடிந்துவிடுகிறது.
இவ்வேளையில், தன்னுடைய மகளின் மரணம் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தவைனா ஆண்டர்சன், இந்தச் சவால் போட்டி மேலும் பல சிறார்களைக் கொன்றுவிட்டது என்பது தனக்கு தெரியவந்திருப்பதாகக் கூறினார்.
இந்த ஆபத்தான விளையாட்டு கள் முடிவுக்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.