தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாவது தங்கம்
ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் ராணியாகத் திகழும் சாந்தி பெரேரா தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் தமது இரண்டாவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஏழு ஆண்டுகளுக்குமுன் அப்போட்டிகளில் தங்கம் வென்றிருந்த சாந்தி, வியட்னாமில் நடந்துவரும் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று புதிய தேசிய சாதனையுடன் தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டார்.
இதற்குமுன் 23.60 விநாடிகளில் ஓடி சாதனை படைத்திருந்த சாந்தி, நேற்று பந்தயத் தொலைவைக் கடக்க 23.52 விநாடிளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.
பிலிப்பீன்சின் கைலா ஆஷ்லி ரிச்சர்ட்சன், கேலா அனிஷ் ரிச்சர்ட்சன் சகோதரிகள் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்
களைக் கைப்பற்றினர்.
ஓடி முடித்ததும் தாம் எடுத்துக்கொண்ட நேரத்தைத் திரையில் கண்ட சாந்தி, உணர்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீர்விட்டார்.
"இது உண்மைதானா, இது உண்மைதானா?" என்று தம்மாலேயே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்டார் இந்தத் தங்க மங்கை.
தொடர்ந்து நான்காவது முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு 12 விநாடி
களுக்குள் 100 மீட்டர் தூரம் ஒடி சாதனை படைத்த முதல் சிங்கப்பூர் பெண் என்னும் சாதனையைப் படைத்தபோது சாந்தி பெரேரா அதிகம் பேசப்பட்டார்.
அதன் பின்னர் 2015ஆம் ஆண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் முதல் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் முதலாவதாக வந்து அவர் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
ஆனால், 2017ஆண்டில் கோலாலம்பூரில் அந்த நடைபெற்ற போட்டியில் அவர் தோல்வியைச் சந்திக்க வேண்டி இருந்தது.
தற்போது மீண்டும் தனது சாதனையை சாந்தி பெரேரா நிரூபித்துள்ளார்.
"திடலில் தடைகளைத் தாண்டி இந்த வெற்றியை அறுவடை செய்ய பல மனத்தடங்கல்களைத் தாண்ட வேண்டி இருந்தது. நான் வெல்வேனா என்ற கேள்விக்கு எனது வெற்றி விடையாகி உள்ளது," என்றார் அவர்.
ஓடி முடித்து சாதித்ததும் உள்ளத்தில் இருந்து கிளம்பிய ஆனந்தம் கண்ணீராக அவரது கன்னங்களில் வழிந்தோடியது.

