தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு அபார வெற்றி கிட்டியது. தாமஸ், உபர் கிண்ணத்துக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடந்து வந்தது.
இதில் ஆண்களுக்கான தாமஸ் கிண்ணப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற ஆட்டக்கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
தொடர்ந்து, அரையிறுதிச் சுற்றில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என்ற ஆட்டக்கணக்கில் முன்னாள் வெற்றியாளரான டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு வெற்றியாளரான இந்தோனீசியாவுடன் மோதியது.
இதில், இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் ஆண்டனி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதிப் போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இந்திய இணையினர் சாத்விக் - சிராக் வெற்றி பெற்றனர். 3வது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கிண்ணத்தை வென்றது.
இந்தோனீசியா அணி 14 முறை வெற்றியாளராக இருந்து வந்துள்ள நிலையில், மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் இந்தோனீசியாவைச் சாய்த்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தாமஸ் கிண்ண பேட்மிண்டன் வெற்றியாளர் பட்டத்தை 73 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் (S$180,000) ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
இந்த வெற்றி இன்னும் பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று கூறித் தமது வாழ்த்துகளையும் நேற்று தெரிவித்துக்கொண்டார் பிரதமர் மோடி.

