கொவிட்-19 கொள்ளைநோய் தொடங்கியதுமுதல் வட்டார நாடுகளில் நடக்கவிருக்கும் முதல் முக்கியமான விமானத்துறை நிகழ்வு நாளை சிங்கப்பூரில் தொடங்கவுள்ளது. இரண்டு நாள் நடைபெறவிருக்கும் சாங்கி விமானத்துறை மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அனைத்துலக விமானத்துறைத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இது குறித்து சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
விமானப் பயணங்களுக்குக் கொள்ளைநோய் ஒரு முற்றுப்புள்ளி வைத்ததை அடுத்து அனைத்துலக விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மெல்ல மீண்டு வருகிறது.
சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் தங்களின் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதுடன் விமானப் பயணங்களை முந்தைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முயன்று வருகின்றன.
போக்குவரத்து அமைச்சுடன் சிஏஏஎஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, சேன்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாடு நிலையத்தில் நடைபெறவுள்ளது.
போக்குவரத்து அமைச்சர்கள், சிவில் விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், அனைத்துலக அமைப்புகள், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், விமான உற்பத்தி நிறுவனங்கள், விமானப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்கள் ஆகியோர் மாநாட்டுக்கு வருகை அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளைப் பாதுகாப்புமிக்க, நீடித்த நிலைத்தன்மையுடைய, அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை கொண்டதாக மாற்றுவதை மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்துலக விமானப் போக்குவரத்துத் தலைவர்கள் உறுதிசெய்வர் எனக் கூறப்பட்டது.
கடந்த ஏப்ரல் 1 முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறந்தது.
விமானப் போக்குவரத்து மையமாக சாங்கி திகழ்வதை உறுதிசெய்வதற்கு இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதற்கிடையே, அனைத்துலக மனித முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தங்களில் சிங்கப்பூர் இந்த மாநாட்டின்போது கையெழுத்திடும். அத்துடன் ஆசிய பசிபிக் வட்டார விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் தரத்தையும் அது உறுதிசெய்யும்.

