இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று அனுசரிக்கப்பட்ட விசாக தினத்துக்காக தளர்த்தப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
மிக மோசமான பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துவரும் சூழ்நிலையில் நேற்று ஆரவாரமின்றி அமைதியான முறையில் விசாக தினக் கொண்டாட்டங்கள் நடந்தன.
இலங்கையில் விசாக தினம் மிக முக்கியமான சமயக் கொண்டாட்டங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆனால் இவ்வாண்டு பொருளியல் சூழ்நிலையைக் காரணம்காட்டி வழக்கமாக ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப சொந்த கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக விசாக தினக் கொண்டாட்டங்களுக்குத் தடங்கல் ஏற்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று நடத்தப்பட்ட தாக்குதல், 2020, 2021ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 தொற்று ஆகிய காரணங்களால் விசாக தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட்டதா அல்லது இது தற்காலிக தளர்வா என்பது குறித்த தகவல்களை அந்நாட்டு அரசாங்கம் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
அரசாங்க ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர், 225க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு வார காலமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பௌத்த சமயத்தார் பெரும்பான்மையாக உள்ள இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் பதவி விலகலைக் கோரி வருகின்றனர்.
உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு. அத்துடன் இதுவரை இல்லாத அளவுக்குப் பொருளாதார மந்தநிலை. மிக அதிக நேரத்திற்கு மின்சாரத் தடை. இவை யாவும் நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்குக் கடும் துயரை அளித்து வருகின்றன.
புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் அவர் அறிவொளி பெற்றதை அனுசரிப்பதே விசாக தினம்.
ஒன்றுகூடி தியானம் செய்தல், பௌத்த விளக்கப் பேருரைகளைக் கேட்டல் போன்றவற்றில் அமைதியான முறையில் நாட்டு மக்கள் நேற்று கலந்துகொண்டனர்.
இதற்கிடையே, நாளை தமது முதல் நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, 73, ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் திணறுகிறார்.
தற்போது இலங்கை அதிபராக உள்ள கோத்தபாய ராஜபக்சே பதவி விலகினால் மட்டுமே எந்த ஒரு புதிய நிர்வாகப் பொறுப்பையும் தாங்கள் ஏற்பர் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.