மேலும் முன்னேற முடியாமல் ரஷ்யா தேங்கிவிட்டதாக உக்ரேன் அதிபர் அறிவிப்பு
உக்ரேனில் ரஷ்யப் படைகள் இனிமேல் முன்னேற முடியாத அளவுக்கு முடங்கிப்போய்விட்டன என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான கார்கிவ்வை பிடிக்க வந்த ரஷ்யப் படைகளைப் பின்வாங்க வைத்து, ரஷ்யாவுடன் கூடிய எல்லைவரை உக்ரேனியப் படைகள் முன்னேறிவிட்டதாக உக்ரேன் நேற்று தெரிவித்தது.
அதேவேளையில், போராட போதிய அளவுக்குச் சேமப்படை வீரர்கள் இல்லாமல் ரஷ்யப் படைகள் திண்டாடுவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், உக்ரேனில் ரஷ்யா தொடுத்து இருக்கும் போர், அந்த நாடு திட்டமிட்டதைப் போல இல்லை என்றும் அந்தப் போரில் கடைசியில் உக்ரேனே வெற்றி பெறும் என்றும் நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் கூறினார்.
உக்ரேனுக்கு மேலும் ராணுவ உதவி தேவை என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளையில், ரஷ்யப் படை களுக்கும் உக்ரேன் தரப்புகளுக்கும் இடையில் கடும் மோதல் நடந்து வரும் டோன்பாஸ் வட்டாரத்தில், உக்ரேனியப் படைகளைச் சுற்றி வளைக்க ரஷ்யா முயன்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து 82 நாள்கள் ஓடிவிட்டன.
இந்த நிலையில், தான் எதிர்பார்த்ததைப் போல ரஷ்யாவுக்கு வெற்றி கிட்டவில்லை என்று பல தரப்புகளும் கூறுகின்றன.
டோன்பாஸ் வட்டாரத்தில் ரஷ்யத் துருப்புகள் 23 குடியிருப்புகளை நாசப்படுத்திவிட்டதாக உக்ரேனிய ராணுவத்தை மேற்கோள்காட்டி 'கியவ் இன்டிபென்டண்ட்' என்ற செய்தித்தாள் தெரிவித்தது. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், உக்ரேனிய வெளியுறவு அமைச்சரை பெர்லினில் சந்தித்தார்.
உக்ரேனுக்கு மேலும் ஆயுதங்களும் உதவிகளும் வந்துகொண்டு இருப்பதாக அந்தச் சந்திப்புக்குப் பிறகு உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் குலோபா கூறினார்.
ரஷ்யப் படைகளுக்குக் கடும் எதிர்ப்பைக் கொடுத்துவரும் உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட 11 ஆகாய ராணுவச் சாதனங்களை நாசப்படுத்திவிட்டதாகத் தெரிவித்தன.
இந்நிலையில் ஃபின்லாந்து, சுவீடன் நாடுகள் நேட்டோ அமைப்பில் சேரும் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றன.
இதன் மூலம் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியில் மட்டுமின்றி அரசதந்திர நிலையிலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு தலைதூக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

