மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர், அம்னோ தலைவரான அகமது ஸாஹிட் அமிடியை 'பொய்யர்' என்று சாடியுள்ளார்.
தம்மை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக ஸாஹிட் மீது வழக்குத் தொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை டாக்டர் மகாதீர் வெளியிட்டார்.
அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு தம்மை இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர் என்று ஸாஹிட் கூறியதாகவும் அதனால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"உடனடியாக ஸாஹிட் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவதூறு வழக்குத் தொடுப்பேன்.
"என்னை அவதூறாகப் பேசிய ஸாஹிட்டின் பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறேன். நான் மலாய் இனத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு ஸாஹிட்டுக்கு சவால் விடுக்கிறேன்.
"அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறான கருத்துகளை மீட்டுக்கொள்ளவில்லையென்றால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன்," என்று அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
"ஆம், என்னிடம் இந்திய ரத்தம் கலந்துள்ளது. இதனை என்னுடைய புத்தகத்திலேயே தெரிவித்துள்ளேன். இதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் என்னுடைய பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டையில் மகாதீர் பின் முகமது என்று குறிப்பிட்டிருப்பதுதான் உண்மை.
"மலேசிய சட்டப்படி நான் மலாய்க்காரன், எனது இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதே என்னுடைய போராட்டமாகும். சுதந்திரம் பெறுவதற்கு முன்பே என்னுடைய பெற்றோர் மலேசியாவில் பிறந்தவர்கள். நாங்கள் அனை வரும் முஸ்லிம்கள்," என்று டாக்டர் மகாதீர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஜூலை 30ஆம் தேதி டாக்டர் மகாதீரின் உண்மையான பெயர் 'மகாதீர் இஸ்கந்தர் குட்டி' என்று தேசிய பதிவுத் துறை தம்மிடம் தெரிவித்ததாக அகமது ஸாஹிட் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.

