சாங்கி விமான நிலையம் வழியாக பயணிகள் போக்குவரத்து வலுவாக மீட்சி கண்டு வருகிறது.
இது, வரும் ஜூன் மாத பள்ளி விடுமுறை காரணமாகவும் வெளிநாடுகளில் கோடை பயணக் காலம் தொடங்குவதாலும் மேலும் வேகமடையும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
சாங்கி விமான நிலையம் வழியாக இப்போது நடக்கும் பயணிகள் போக்குவரத்து, கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு அளவுக்குத் திரும்பி இருக்கிறது.
இது இந்த ஆண்டு இறுதியில் 50 விழுக்காடு ஆக வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்காக இருக்கிறது.
என்றாலும் ஜூன் மாதம் பயணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குப் பிறகு இந்த இலக்கை அரசாங்கம் மீண்டும் ஆராயும் என்று நேற்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
விமான நிலைய ஊழியர் அணியைப் பழையபடி பலப்படுத்துவதும் செயல்முறைகளை வேகப்படுத்துவதும் சவாலாக இருக்கும் என்பதை அவர் சாங்கி விமானப் போக்குவரத்துத் துறை உச்ச மாநாட்டிற்குப் பிறகு நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சாங்கி விமான நிலையம் உள்பட உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது என்பதை அவர் சுட்டினார். பயணிகள் அதிகரிப்பதைத் திறம்பட கையாள வேண்டும் என்பதே நம்முடைய உடனடி முக்கிய முன்னுரிமை என்பதை அமைச்சர் திரு ஈஸ்வரன் வலியுறுத்தினார்.
பயணத் துறை வேகம் கூடும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால், அடுத்த பயணிகள் அலைக்கு நாம் தயாராக வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதற்காக சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தத் தொழில்துறைத் தலைவர்கள் கூடி உச்சநிலை சந்திப்பை நடத்தினர்.
அதற்குப் பிறகு சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு, அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம், அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம், அனைத்துலக விமான நிலையங்கள் மன்றம் ஆகிய அமைப்புகள் நேற்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீட்சியை வேகப்படுத்தப்போவதாக உறுதி கூறி 19 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
சுற்றுச்சூழல் நிலைப்பாட்டை மேம்படுத்தப்போவதாகவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்ச்சியை வேகப்படுத்தப்போவதாகவும் அவர்கள் உறுதி தெரிவித்தார்கள். வரும் 2024ல் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை முழு மீட்சியடைய பாடுபடப்போவதாக அவர்கள் உறுதி கூறினர்.
பாதுகாப்பாக, வேகமாக பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக நேருக்குநேர் தொடர்பற்ற நவீன முறைகளைப் பின்பற்றி பயணிகளை அனுமதிக்க ஊக்கமூட்டப்போவதாகவும் அவர்கள் உறுதி தெரிவித்தனர்.
இதனிடையே, இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் விமானப் பாதுகாப்பு அறநிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து புதிய மாநாடு ஒன்றுக்குக் கூட்டாக தான் ஏற்பாடு செய்யப்போவதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.
'விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கான ஆசிய பசிபிக் உச்ச மாநாடு' என்று குறிப்பிடப்படும் அந்த மாநாடு, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் பாதுகாப்புத் தரங்களையும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புகள், விமான நிறுவனங்கள், விமான தயாரிப்பு நிறுவனங்கள், பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டத்தொழிலர்கள், உயர்நிலை நிர்வாகிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வர்.
அவர்கள் பாதுகாப்புத் துறை சவால்கள் பற்றியும் புதிய செயல்திட்டங்கள் பற்றியும் விவாதிப்பார்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த மாநாடு சிங்கப்பூரிலும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள வேறு ஒரு நாட்டிலும் மாறி மாறி நடக்கும்.
அமைச்சர்: ஜூன் விடுமுறை, உலக கோடைகால பயணத் தொடக்கம் உதவும்

