கடல்மட்ட உயர்விலிருந்து வடமேற்குக் கடலோரப் பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை
உயர்ந்துவரும் கடல்மட்டத்தில் இருந்து நாட்டைத் தற்காப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூர் நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் முடுக்கிவிட இருக்கிறது.
அந்நடவடிக்கைகள் நீக்குப்போக்கான வகையிலும் அந்தப் பகுதியில் நிலப் பயன்பாட்டுத் தேவைகளைக் கவனத்தில் கொண்டதாகவும் அமையும்.
தீவைச் சுற்றி சுவர் எழுப்புவது போன்ற ஒரே அணுகுமுறையாக இல்லாமல், நாட்டின் வெவ்வேறு கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற தீர்வுகளைக் கழகம் ஆராய்ந்து வருகிறது.
சிங்கப்பூரின் வடமேற்கில் உள்ள 17.1 கிலோமீட்டர் நீள கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளைக் கழகம் வரவேற்கிறது. முதன்முறையாக, அத்தகைய பாதுகாப்பு அம்சங்களை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்த வடிவமைப்புத் திட்டங்களை வழங்கும்படி விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்கால சுங்கை காடுட் பசுமை வட்டாரம், லிம் சூ காங் உயர்தொழில்நுட்ப வேளாண் உணவுத் தொகுதி போன்றவை அமையவுள்ள சுங்கை காடுட், லிம் சூ காங் பகுதிகளைச் சுற்றி இந்தக் கடலோரப் பகுதி அமைந்துள்ளது.
கடல்மட்ட உயர்வானது சிங்கப்பூருக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனை உணர்ந்தே, சமர்ப்பிக்கப்படும் கடலோரப் பாதுகாப்புத் திட்டங்கள், ஐந்து மீட்டர் வரையிலான கடல்மட்ட உயர்வையும் பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழையையும் எதிர்கொள்ளும் படியான தீர்வுகளாக விளங்க வேண்டும் என்று கழகம் தனது ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய கடல்மட்டத் திட்டம் போன்ற ஆய்வு நடவடிக்கைகள் மூலமாக, உலகளாவிய பருவநிலை மாற்றம், சிங்கப்பூரின் கடல்மட்ட உயர்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அண்மைய ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கையானது, இத்தகைய ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை முழுமைப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. அதாவது, வெவ்வேறு இயல்புகளையும் நிலப் பயன்பாட்டுத் திட்டங்களையும் கொண்டுள்ள பகுதிகளில் நடைமுறைப்படுத்தத்தக்க கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயப்படும்.
எடுத்துக்காட்டாக, கிராஞ்சி நீர்த்தேக்கம், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி, சுங்கை பூலோ சதுப்பு நிலப்பகுதி, கிராஞ்சி கடலோர இயற்கைப் பூங்கா, வர இருக்கும் லிம் சூ காங் இயற்கைப் பூங்கா, மண்டாய் சதுப்புநிலக் காடுகள் உள்ளிட்டவை வடமேற்குக் கடலோரமாக அமைந்துள்ளவற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியப் பகுதிகள்.
"இப்பகுதிகளின் சிறப்பியல்புகளைப் பொறுத்து, கடலோரப் பாதுகாப்பு உத்திகளிலும் நடவடிக்கைகளிலும் சில முக்கியப் பரிசீலனைகள் உள்ளன," என்று கழகத்தின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஹேஸல் கூ தெரிவித்தார்.
இந்த 17.1 கி.மீ. நீளக் கடலோரம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
சதுப்புநிலக்காடுகளும் வேளாண் நிலங்களும் செறிந்த 7 கி.மீ. நீளப்பகுதி, தொழில்துறை வட்டாரத்தையும் வரவிருக்கும் ஓர் இயற்கைப் பூங்காவையும் உள்ளடக்கிய 3.3 கி.மீ. நீளப்பகுதி, உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை உள்ளடக்கிய 6.8 கி.மீ. நீளப்பகுதி ஆகியவையே அவை.
"நீடித்து நிலைக்கத்தக்க, வாழத்தகுந்த கடலோரப் பகுதியை உருவாக்கும் வகையிலான கருத்தியல் வடிவமைப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இருக்கிறது," என்றார் திருவாட்டி கூ.
முதற்கட்டமாக, அதிகபட்சம் நான்கு விண்ணப்பதாரர்கள் வரை ஒப்பந்தப்புள்ளியின் இரண்டாம் கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவர். ஒப்பந்தப்புள்ளியின் 2ஆம் கட்டம் இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் இடம்பெறும்.
வடமேற்குக் கடலோரத்தின் இப்பகுதி குறித்த ஆய்வு அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கி, 2030ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட தீவின் 30 விழுக்காட்டுப் பகுதி கடல்மட்டத்தில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்திற்கும் குறைவாக இருப்பதால், கடல்மட்ட உயர்வால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.
சிங்கப்பூர் பருவநிலை ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தேசிய அளவிலான பருவநிலை மாற்ற ஆய்வின்படி, வரும் 2100ஆம் ஆண்டுவாக்கில் சிங்கப்பூரின் சராசரி கடல்மட்டம் ஒரு மீட்டர் வரை உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

