கடும் பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துவரும் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்து இருக்கிறார்.
உற்பத்தித்திறனைப் பெருக்கும் வகையில், அடுத்த சாகுபடி காலத்திற்குப் போதிய உரங்களை அரசாங்கம் வாங்கும் என்று பிரதமர் ரணில் உறுதியளித்துள்ளார்.
அனைத்துவித வேதி உரங்களைப் பயன்படுத்தவும் தடைவிதிப்பதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவித்தார். இதனால் விளைச்சல் பெரிதும் குறைந்துபோனது.
அதனைத் தொடர்ந்து, வேதி உரங்கள் மீதான தடையை இலங்கை அரசு மீட்டுக்கொண்டது. ஆனாலும், குறிப்பிடத்தக்க அளவிற்கு உரங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், "மே-ஆகஸ்ட் சாகுபடிப் பருவத்திற்குப் போதிய உரங்களை வாங்க கால அவகாசமின்றிப் போகலாம். ஆயினும், செப்டம்பர்-மார்ச் சாகுபடிப் பருவத்திற்குப் போதுமான அளவிற்கு உரங்கள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று பிரதமர் ரணில் டுவிட்டர் வழியாகத் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி, எரிபொருள், மருந்துப்பொருள் பற்றாக்குறையால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
"வாழ்க்கை எவ்வளவு சிரமமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசிப் பயனில்லை," என்றார் கொழும்பில் காய்கனிகள் விற்றுவரும் 60 வயதான திருவாட்டி சுமனாவதி. இன்னும் இரு மாதங்களில் நிலைமை எப்படி இருக்கும் எனக் கணிக்க இயலாது என்ற அவர், இதே நிலை நீடித்தால் தாங்கள் ஊரைவிட்டு வெளியேறும் நிலைகூட ஏற்படலாம் என்றார் அவர்.
மூன்றாவது நாளாக எரிவாயு உருளைக்காக வரிசையில் காத்திருந்த திரு முகம்மது ஷஸ்லி கூறுகையில், "எரிவாயு, மண்ணெண்ணெய் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது. கடைசியில் என்ன நடக்கும்? உணவின்றி நாங்கள் சாகப் போகிறோம். நூறு விழுக்காடு அதுதான் நடக்கப் போகிறது," என்று ஆதங்கப்பட்டார் பகுதிநேர ஓட்டுநராக இருக்கும் திரு ஷஸ்லி.
கடந்த மாதம் பணவீக்கம் 29.8% அதிகரித்தது. அத்துடன், ஆண்டு அடிப்படையில் உணவுப்பொருள்கள் விலையும் 46.6% கூடியது. இந்நிலையில், அடுத்த இரு மாதங்களில் பணவீக்கம் 40 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.