தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில், ஆலைக்கு எதிராகப் போராடிய 30 பேர்மீது இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த அந்தத் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மாண்டனர். அந்தச் சம்பவத்திற்கு ஐநா மனித உரிமை அமைப்பும் கண்டனம் தெரிவித்திருந்தது. இறந்தவர்களில் அறுவர் பின்னால் இருந்து சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர், அரசாங்க அதிகாரிகள் எவர்மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
காவல்துறையினரைவிட போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்துவதைத் தவிர காவல்துறைக்கு வேறு வழியில்லை என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டது, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது உட்பட 17 குற்றச்சாட்டுகள் அந்த 30 பேர்மீது சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
துப்பாக்கிச்சூட்டில் மாண்டவர்களின் குடும்பத்தினர், சிபிஐயின் இந்த இறுதி அறிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"நல்ல தண்ணீர், காற்று கேட்டுப் போராடியவர்களைக் காக்கை குருவியைச் சுடுவதுபோல் சுட்டுக்கொன்றனர். சம்பவம் நடந்து நான்காண்டுகள் ஆன நிலையில், சிபிஐ தனது 3வது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் காவல்துறையினர் ஒருவர்மீது கூட வழக்கு பதியவில்லை. குற்றவாளிகளைச் சாட்சிகளாகவும் சாட்சிகளைக் குற்றவாளிகளாகவும் காட்டியுள்ள இந்த அறிக்கை மிகவும் மோசமானது," என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிபிஐ அறிக்கையைக் கண்டித்து, துப்பாக்கிச்சூட்டின் நினைவு நாளான நாளை தூத்துக்குடியில் போராட்டம் நடத்தவிருப்பதாக ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரி ராகவன் சொன்னார்.
முன்னதாக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் தொடர்பில் 3,000 பக்கங்கள் கொண்ட முழுமையான விசாரணை அறிக்கையைத் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்து, சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.