இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரிலுள்ள அவேர் கிளனீகல்ஸ் குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை மூலமாக நோயாளி ஒருவரின் உடலில் இருந்து ஒரு மணி நேரத்தில் 206 சிறுநீரகக் கற்களை அகற்றிச் சாதித்துள்ளனர்.
நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த வீரமல்ல ராமலட்சுமையா, 56, என்ற ஆடவர் கடந்த ஆறு மாதங்களாக இடுப்புப் பகுதியில் கடுமையான வலியால் துன்புற்று வந்தார்.
உள்ளூர் மருத்துவர் ஒருவர் பரிந்துரைந்த மருந்தை அவர் உட்கொண்டு வந்தார். ஆனாலும், வலி தொடர்ந்தது. இதனையடுத்து, அந்த ஆடவர் அவேர் கிளனீகல்ஸ் குளோபல் மருத்துவமனையை நாடினார்.
இதுகுறித்து விவரித்த அந்த மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் பூலா நவீன்குமார், "முதற்கட்ட ஆய்வுகளும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் அவரது இடப்பக்கத்தில் சிறுநீரகக் கற்கள் இருப்பதைக் காட்டின. பின்னர் 'சிடி ஸ்கேனில்' அது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நோயாளிக்கு ஆலோசனை வழங்கி, அவரை அறுவை சிகிச்சைக்குத் தயார்செய்தோம். ஒரு மணி நேர அறுவை சிகிச்சையில் 206 சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதன்பிறகு அவர் உடல்நலம் தேறவே, மறுநாளே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்," என்றார்.
கோடைக்காலத்தில் கடும் வெப்பம் காரணமாக பலரும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்படலாம். அதனால், சிறுநீரகங்களில் கற்கள் தோன்றலாம். இதனால், கோடைக்காலத்தில் அதிக நீர், முடிந்தால் இளநீர் அருந்துங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

