இந்தியாவின் மத்திய புலன்விசாரணை இலாகா (சிபிஐ) நேற்று பல நகர்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளைத் தொடங்கியது.
இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை தகவல்கள் சேமிக்கப்பட்டு இருந்த கணினிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் தகவல்கள் வெளியாகி இருப்பதாகக் கூறப்பபடுவதன் தொடர்பில் சிபிஐ சோதனைகளைத் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மும்பை, காந்தி நகர், டெல்லி, நொய்டா, குருகிராம், கோல்கத்தா, உள்ளிட்ட பல நகர்களிலும் உள்ள 12க்கும் மேற்பட்ட இடங்களை அதிகாரிகள் சோதித்து வருவதாகவும் பங்குச் சந்தை தரகர்கள் விசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பில், தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சித்ரா ராமகிருஷ்ணா, குழுமச் செயல்முறை அதிகாரியான ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இரண்டு பேருக்கும் எதிராக சிபிஐ குற்றச்சாட்டைப் பதிந்துள்ளது.
சித்ரா, தேசிய பங்குச் சந்தைக்குப் பொறுப்பு வகித்தபோது, 2010 முதல் 2015வரை, 'ஓபிஜி செக்யூரிட்டீஸ்' என்ற நிறுவனம், பங்குச் சந்தையின் வருநிலை வர்த்தகப் பிரிவின் தகவல் சேமிப்பு கணினியுடன் 760 வர்த்தக நாள்களில் தொடர்பு கொண்டது என்பது புலன்விசாரணை மூலம் இதுவரை தெரிய வந்துள்ளது.
சித்ராவும் சுப்பிரமணியனும் பொறுப்பில் இருந்தபோது தேசிய பங்குச் சந்தையைச் சேர்ந்த அதிகாரிகள், குறிப்பிட்ட தரகர்களுக்குச் சலுகை அளித்து இருக்கிறர்கள்.
அவற்றைப் பயன்படுத்தி தகாத முறையில் லாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தான் விசாரித்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சித்ரா பொறுப்பு ஏற்றதும் அவர் தனது ஆலோசகராக சுப்பிரமணியனை நியமித்துக்கொண்டார்.
சுப்பிரமணியன் ஆண்டுக்கு 4.21 கோடி ரூபாய் சம்பளம் பெறும் குழுமச் செயல்முறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்த நியமனமும் பதவி உயர்வும் 'இமயமலை யோகி' ஒருவரின் வழிகாட்டலின்படி இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த யோகி யார் என்பது மர்மமாகவே உள்ளது.
இதனிடையே, புதுடெல்லியில் இருந்து செயல்படும் ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் உரிமை யாளர் சஞ்சய் குப்தா என்பவரையும் சிபிஐ மடக்கி இருக்கிறது.
இவர் பங்குச் சந்தை கணினிகளில் அத்துமீறி நுழைந்து லாபம் சம்பாதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் இந்திய பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை அதிகாரிகளையும் இதர பலரையும் சிபிஐ விசாரித்து வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் அதிகாரிகளுடன் சேர்ந்து ஓபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பங்குச் சந்தையின் தகவல் சேமிப்பு கணினிகளைத் தவறான முறையில் பயன்படுத்தி இருக்கிறார் என்றும் மும்பையில் இருக்கும் பங்குச் சந்தையின் அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் தகவல்களைப் பெற அனுமதி வழங்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

