வடகொரியாவின் மிரட்டலைச் சமாளிக்க தேவையெனில் அதிகளவு அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவும் தென்கொரியாவும் இப்போதைய ராணுவப் பயிற்சிகளைவிட பெரிய அளவில் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்றும் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் இணங்கி இருக்கிறார்கள்.
புதிய வட்டார, உலக சவால்களைச் சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா கூட்டணியை விரிவுபடுத்தவும் அவர்கள் இணங்கினர்.
அமெரிக்கா-தென்கொரியா இடையில் நெடுங்காலமாக தோழமை உறவு நிலவி வருகிறது. இது இன்னும் மேம்பட வேண்டும். அப்போதுதான் வடகொரிய மிரட்டலை மட்டுமின்றி இந்தோ-பசிபிக் வட்டாரத்தை சுதந்திரமான, திறந்த பகுதியாக வைத்திருக்க முடியும்.
உலகளவில் பொருள், சேவை விநியோகக் கட்டமைப்புகளையும் பாதுகாக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் பைடன், தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் யோல் இருவரும் நேற்று தெரிவித்தனர். தென்கொரியாவின் புதிய அதிபராக 11 நாள்களுக்கு முன் யூன் பதவி ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு முதன்முதலாக இந்த இரு தலைவர்களும் சோல் நகரில் இப்போது சந்திக்கிறார்கள்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுதம் அல்லது ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார் என்பது வேவுத்துறை மூலம் தெரியவந்து இருக்கிறது.
வடகொரியா மிரட்டலாக இருக்காது என்பதற்கு அமெரிக்கா அதிக உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் விரும்புகிறார்.
தேவை எனில் அணுஆயுதங்களை வழங்கி தென்கொரியாவைக் காக்க அமெரிக்கா கடப்பாடு கொண்டிருப்தாக கூட்டறிக்கை ஒன்றில் அதிபர் பைடன் மீண்டும் உறுதிபட கூறினார். ராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவது பற்றி பரிசீலிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். பேச்சுவார்த்தைகளை முக்கியமானவையாக கருதி அவற்றில் வடகொரியத் தலைவர் கிம் ஆர்வம் காட்டினால் அவரைச் சந்திக்க தான் தயாராக இருப்பதாக பைடன் குறிப்பிட்டார்.
வடகொரியாவுக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்தை வழங்கத் தயார் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர். ஆனால் வடகொரியாவிடம் இருந்து பதில் இல்லை.