சாங்கி விமான நிலையம் முனையம் 2ன் ஒரு பகுதி அடுத்த மாதமே திறக்கப்படக் கூடும் என்று தெரியவந்து இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
அந்த முனையம் 2020ஆம் ஆண்டு மே மாதம் மூடப்பட்டது. அந்த முனையத்தின் வருகை கூடத்தின் ஒரு பகுதி ஜூன் மாதமே திறக்கப்படலாம் என்று கடந்த ஏப்ரல் மாதம் சாங்கி விமான நிலையக் குழுமம் நடத்திய ஒரு கூட்டத்தின்போது, அங்கு இடங்களை குத்தகைக்கு எடுத்திருப்போரிடம் தெரிவிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, அந்த முனையத்தின் புறப்பாட்டுக் கூடத்தின் ஒரு பகுதியும் இடைவழிப் பயணிகளுக்கான பகுதியும் அக்டோபர் மாதமே திறக்கப்படலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
அந்த முனையத்தை திறப்பதற்கான சாத்தியகூறுகள் பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்படும். அந்த ஆய்வின் முடிவுகளைப் பொறுத்தும் ஊழியர்கள் கிடைப்பதைப் பொறுத்தும் இதர அம்சங்களைக் கருத்தில்கொண்டும் முனையம் 2 எந்த தேதியில் திறக்கப்படும் என்பது முடிவு செய்யப்படும்.
இதனிடையே, இது பற்றிக் கேட்டபோது கருத்து கூறிய சாங்கி விமான நிலையக் குழுமத்தின் பேச்சாளர், விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரிப்பதையும் பயணிகள் போக்குவரத்து கூடுவதையும் கருத்தில்கொண்டு அதற்குத் தோதாக இந்த ஆண்டில் முனையம் 2 படிப்படியாகத் திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார்.
இதுபற்றி பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.
முனையம் 2 மூடப்பட்டு இருக்கையில் அங்கு திட்டமிட்டப்படி புதுப்பிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. அதை 18 மாதங்கள் மூடுவது என்று முதன்முதலாக திட்டமிடப்பட்டது. ஆனால் விமானப் பயணிகள் குறைவாக இருந்ததால் தொடர்ந்து அந்த முனையம் இன்னமும் மூடியே இருக்கிறது.
சாங்கி விமான நிலையம் வழியாக பயணிகள் போக்குவரத்து வலுவான நிலையில் மீட்சி கண்டு வருவதாகவும் ஜூன் விடுமுறை காரணமாகவும் உலக கோடை பயணக் காலம் தொடங்குவதாலும் பயணிகள் போக்குவரத்து மேலும் சூடுபிடிக்கும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் கடந்த புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.
கொவிட்-19க்கு முந்திய பயணிகள் அளவில் சராசரியாக 40% அளவை சாங்கி விமான நிலையம் எட்டிவிட்டது. இந்த ஆண்டு முடிவில் 50% அளவை எட்டிவிட வேண்டும் என்பது இலக்கு.