சாங்கி விமான நிலைய முனையம்2 இந்த மாதம் 29ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும். வரும் மாதங்களில் விமானப் பயணிகளின் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சமாளிக்க சாங்கி மையம் ஆயத்தமாகி வருகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் முனையம் 2 மூடப்பட்டுள்ளது. அங்கு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தப் பணிகள் 2024ல் முடிவடையும். அதன் விளைவாக முனையம் 2ன் ஆற்றல், மேலும் ஐந்து மில்லியன் பயணிகளைக் கையாளும் அளவிற்கு அதிகரிக்கும். ஆண்டு ஒன்றுக்கு 28 மில்லியன் பயணிகள் போக்குவரத்தைக் கையாளக்கூடிய ஆற்றலுடன் அந்த முனையம் திகழும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று தெரிவித்தது.
முதல் கட்டமாக அந்த முனையத்தின் தெற்குப் பகுதியில் வருகையாளர்கள் குடிநுழைவுத் துறை, சரக்கு பெட்டிகள் வந்து சேரும் ஏற்பாடு, நுழைவு வாயில்கள் ஆகியவை ஆயத்தமாகும்.
முனையம் 3ல் செயல்படும் விமான நிறுவனங்களின் விமானங்கள் உச்ச நேரங்களில் முனையம் 2ல் தரையிறங்கும்.
முனையம் 3ல் புறப்படும் விமானங்களில் ஒரு சில விமானங்களைச் சேர்ந்த பயணிகள் முனையம் 2ல் உள்ள நுழைவு வாயில்களைப் பயன்படுத்தக்கூடும்.
விமானம் தரை இறங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் முன்னதாக சாங்கி விமான நிலைய இணையத்தளத்திலும் 'ஐசாங்கி' செயலியிலும் அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கும்.
முனையம் 2 விரிவுபடுத்தப்படுகிறது. அதனையடுத்து வருகைக் கூடம் பெரியதாக இருக்கும்.
தானியங்கி குடிநுழைவு வாயில்களும் சிறப்பு உதவித் தடங்களும் அதிகமாக இருக்கும்.
தானியங்கி குடிநுழைவு தடங்கள் அதிகரிக்கப்படும். இந்தத் தடங்கள் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் தங்கள் முகம், கண் தோற்றத்தைப் பதிந்து இருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் முக்கியமாகச் சேவையாற்றும்.
இப்படி செய்து இருக்கும் தகுதி உள்ள வெளிநாட்டு வருகையாளர்களும் இந்தத் தடங்களைப் பயன்படுத்தி வேகமாக அனுமதி பெற்று செல்லலாம்.
சிறப்பு உதவித் தடங்கள் மூலம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக, எளிதாக அனுமதி பெற்று வேகமாகச் செல்லலாம்.
விசாலமாக இருக்கும் இந்தத் தடங்கள், நடமாட்டப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் உதவும்.
பயணிகளின் சரக்கு பெட்டிகள் மூன்று நகரும் மேடைகளில் வரும். அவற்றில் ஒரு மேடையின் நீளம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.