ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் இல்லை என்றும் மாஸ்கோவுக்கு எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் உக்ரேன் அறிவித்தது. அதேவேளையில், உக்ரேனின் கிழக்கு டோன்பாஸ் வட்டாரத்தில் தாக்குதலை ரஷ்யா வேகப்படுத்தியது.
பின்லாந்துக்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவிட்டது.
தெற்கு துறைமுக மரியபோல் நகரைப் பிடித்துவிட்ட ரஷ்யா, டோன்பாஸ் வட்டாரத்தில் இருக்கும் முக்கியமான இரண்டு மாநிலங்களில் ஒன்றான லுஹான்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பி உள்ளது.
மாஸ்கோ அதன் மீது கடும் தாக்குதலை நடத்த தொடங்கியது.
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள், உக்ரேன் மீது ரஷ்யா படை எடுப்பதற்கு முன்பே, லுஹான்ஸ் மாநிலத்தின் பெரும் பகுதியைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் டொனெட்ஸ்க் மாநிலத்தின் பல பகுதிகளும் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது.
இருந்தாலும் டோன்பாஸ் வட்டாரத்தில் உக்ரேன் வசம் எஞ்சி இருக்கும் பகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. டோன்பாஸ் வட்டாரத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது என்று உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
இரண்டு முக்கிய நகர்களைக் குறிவைத்து தாக்க ரஷ்யா முயன்று வருவதாகவும் உக்ரேனிய படைகள் கடும் எதிர்ப்பைக் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், போர் நிறுத்தத்தை ஏற்க மாட்டோம் என்றும் எல்லைகளை விட்டுக்கொடுப்பது தொடர்பான எந்த உடன்பாட்டை யும் ரஷ்யாவுடன் செய்துகொள்ளமாட்டோம் என்றும் உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் பொடோல்யாக் கூறினார்.