குரங்கம்மை பாதிப்பு அதிகமாகி வருவது ஒவ்வொருவருக்குமே கவலை அளிப்பதாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வைரஸ் கிருமி பற்றி ஆலோசகர்களிடம் தான் பேசி இருப்பதாக அவர் தென்கொரியாவின் சோல் நகரில் செய்தியாளர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.
"குரங்கம்மை கிருமி தொடர்பில் நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.
"அதைத் தடுக்க என்ன செய்யலாம்? தடுப்பூசி மருந்து ஏதேனும் பலன் தருமா என்பது பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்," என்று தென்கொரியாவில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறி ஜப்பான் புறப்பட்டதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
"அந்தக் கிருமி வேகமாகப் பரவினால் தொடர் விளைவுகள் பாதகமாக இருக்கும். குரம்கம்மை கவலை தரும் அம்சமாக இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலருக்கு குரங்கம்மை தொற்று அதிகமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒருவருக்கு அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கம்மை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் அது உலகளவில் பல நாடுகளுக்கும் பரவக்கூடும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளில் அந்தக் கிருமி பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை மரணம் அறிவிக்கப்படவில்லை. அந்த நாடுகளில் மேலும் 28 பேருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குரங்கம்மை தொடர்பில் வரும் நாள்களில் தான் வழிகாட்டி நெறிமுறைகளையும் பரிந்துரைகளையும் வெளியிடப் போவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.